அசாம்- மேகாலயா எல்லை பிரச்சினை.. முக்கிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! சாதித்த அமித் ஷா
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு இடையே எல்லை விவகாரம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்கள் சுமார் 885 கிமீ எல்லையைப் பகிர்ந்துள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக எல்லைப் பிரச்சனை நிலவி வந்தது.
இந்நிலையில், எல்லை பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஆகியோர் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டனர்.
சர்ச்சைக்குரிய ஆறு செக்டர்களில் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஜனவரி 29ஆம் தேதி இரு மாநிலங்களுக்கு இடையே கையெழுத்தான வரைவுத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இரண்டு மாநிலங்களும் கடந்த ஜூன் 2021இல் எல்லை பிரச்சினையைத் தீர்க்க குழுக்களை அமைத்தன. இந்த குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம், சர்ச்சைக்குரிய 36.79 சதுர கி.மீ நிலத்தை இரு மாநிலங்களுக்கு இடையே பிரிக்கும் வகையில் உள்ளது.
சர்ச்சைக்குரிய பகுதியில் 18.51 சதுர கிலோமீட்டரை அசாம் மாநிலமும் 18.28 சதுர கிலோமீட்டரை மேகாலயா மாநிலமும் பெறும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் 70 சதவிகிதம் சர்ச்சை இல்லாததாக மாறியுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.