பயம்.. குடும்பத்தில் 18 பேர் கொலை.. டெல்லியில் தலைமறைவு.. வங்க பிரதமர் ஹசீனா சொன்ன சோக வரலாறு!
டெல்லி: இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.
இன்று ANI செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், 1975ல் தான் எதிர்கொண்ட நெருக்கடி குறித்தும் அப்போதைய இந்திரா காந்தி அரசாங்கம் தனக்கு உதவியது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.
தன்னுடைய குடும்பத்தில் 18 பேர் கொல்லப்பட்ட நிலையில், தனக்கு இந்தியாதான் முதலில் உதவ முன்வந்தது என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசம்
இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வங்கதேசம் 1947ல் வங்க பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் 1971ம் ஆண்டு இந்தியாவின் உதவியால் வங்கதேச விடுதலை போரின் மூலம் கிழக்கு பாகிஸ்தான், 'வங்கதேசமாக' உருவானது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்நாட்டில் கலவரம், பஞ்சம் என தலைவிரித்தாடியது. குறிப்பாக 1975ல் ஏற்பட்ட ராணுவ புரட்சி பல முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.

ஜெர்மனி பயணம்
இந்த ராணுவப் புரட்சியால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் அதிபரின் மூத்த மகளும், தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசீனா தான் எதிர்கொண்ட நெருக்கடிகள் குறித்தும், இந்தியா தனக்கு எவ்வாறு உதவியது என்பது குறித்தும் ANI செய்தி நிறுவனத்திற்கு விரிவாக பேட்டியளித்திருந்தார். பேட்டியில் அவர் கூறியதாவது, "1975ல் எனது கணவருடன் நாங்கள் ஜெர்மனிக்கு பயணப்பட்டோம். அவர் ஒரு அணுசக்தி விஞ்ஞானி என்பதால் எங்களுக்கு அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது."

படுகொலை
"அப்போது எங்களை வழியனுப்பி வைக்க எங்களது பெற்றோரும், எனது சகோதரிகளும் வந்திருந்தனர். இதுதான் அவர்களுடனான எனது கடைசி சந்திப்பு என எனக்கு அப்போது தெரியாது. இதன் பின்னர் சில நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15 அன்று தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டதாக செய்தி கிடைத்தது. மேலும் சிலர் தூக்கிட்டு கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்தன. உண்மையில் என்னால் இதை நம்ப முடியவில்லை."

இந்தியாவின் உதவி
"இந்த கொலைகளுக்கு காரணம் ஆட்சிக் கவிழ்ப்பு என தெரியவந்தது. இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுக்கு உதவுவதற்கு முன்வந்த முதல் நாடு இந்தியாதான். அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, எங்களுக்கு தங்க இடம் மற்றும் பாதுகாப்பு கொடுப்பதாக தெரிவித்திருந்தார். எனவே நாங்கள் முதலில் டெல்லி சென்றுவிட்டால் வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை விரைவில் தெரிந்துகொள்ள முடியும் என முடிவெடுத்தோம்.

18 பேர் பலி
அதன்படி நாங்கள் டெல்லி சென்றோம். எனது தந்தையை கொன்றவர்கள் எங்கள் உறவினர்கள் சிலரையும் கொன்றனர். எனவே எங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. எங்களது உறவினர்கள், குழந்தைகள், பணிப்பெண்கள் என மொத்தம் 18 பேர் எங்கள் குடும்பத்தில் கொல்லப்பட்டிருந்தனர். எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் ஆட்சிக்கு வரக்கூடாது என அவர்கள் விரும்பினார்கள். என் மாமாவையும் கூட அவர்கள் கொன்றுவிட்டார்கள்.

தலைமறைவு வாழ்க்கை
இதன் தொடர்ச்சியாக நாங்கள் ஆகஸ்ட் 24ம் தேதி இந்திரா காந்தியை சந்தித்தோம். அவர் எங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொடுத்தார்.
என் கணவருக்கு வேலையையும், நாங்கள் தங்குவதற்கு பண்டார வீதியில் வீடு ஒன்றையும் ஏற்பாடு செய்துகொடுத்தார். அடுத்த 2-3 ஆண்டுகள் வரை நாங்கள் அங்கேயே தங்கினோம். எனது குழந்தைகள் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ளாமல் எப்போதும் அழத்தொடங்கியிருந்தனர். அவர்களுக்கு தங்கள் பாட்டி, தாத்தா மற்றும் மாமாவை காண வேண்டும் என்று விரும்பியிருந்தனர்.
ஆனால் அவர்களின் ஆசையை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக எங்கள் அடையாளங்களையும் நாங்கள் மறைத்து வாழ வேண்டியிருந்தது" என ஷேக் ஹசீனா தனது நெருக்கடியையும், இந்தியா தனக்கு எவ்வாறு உதவியது என்பதையும் பேட்டியில் கண்ணீர் மல்க நினைவு கூறினார்.












Click it and Unblock the Notifications