பாரத் பந்த்: பல மாநிலங்களில் ரயில் மறியல்- லக்னோவில் 144 தடை உத்தரவு- போராட்டங்களுக்கு தடை
டெல்லி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் பாரத் பந்த்-ன் ஒரு பகுதியாக பல மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பல இடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 13-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முழு அடைப்பு
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மகாராஷ்டிரா, ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டத்தை இடதுசாரிகள் நடத்தினர்.

மாநிலங்களில் ரயில் மறியல்
இதனால் பல பகுதிகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை எரித்து வாகனப் போக்குவரத்து தடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் தடை விதித்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
தெலுங்கானாவில் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். டெல்லியில் மாநில எல்லை பகுதிகளில் போலீசார் உச்சகட்ட கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் போபாலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநிலங்கள் தோறும் போராட்டம்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மாணவர் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசத்தில் பிரக்யாராஜ் அருகே சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். ஆந்திராவின் விஜயவாடாவிலும் இடதுசாரிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications