காங்கிரஸ் பாத யாத்திரைக்கு திடீர் பிரேக்.. உடனே டெல்லி பறக்கும் ராகுல் காந்தி.. ஓ இது தான் காரணமா
டெல்லி: ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ள ராகுல் காந்தி முதல்முறையாக பிரேக் எடுத்துக் கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி இப்போது பாத யாத்திரை சென்றுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பதே இந்த பாத யாத்திரையின் நோக்கம் என்று காங்கிரஸின் கூறுகின்றனர். மொத்தம் 150 நாட்களுக்கு அவர் பாத யாத்திரை செல்கிறார்.
சசி தரூர் vs மல்லிகார்ஜுன கார்கே.. புதிய காங்கிரஸ் தலைவர் யார்? 65 இடங்களில் தொடங்கிய வாக்குப்பதிவு!
ராகுல் காந்தி
கன்னியாகுமரியில் இந்த பாத யாத்திரையைக் கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குமரியில் தொடங்கிய இந்த பேரணி, கேரளா, கர்நாடகாவை கடந்து உள்ளது. இந்த பாத யாத்திரையில் ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி 20 கிமீ வரை நடைப்பயணம் செல்கிறார். காங்கிரஸ் தலைவர்கள் மக்களைச் சந்திப்பது இல்லை என்ற குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இந்த பாத யாத்திரையை ராகுல் மேற்கொண்டு உள்ளார்.
பாத யாத்திரை
கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மேலும், காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பதால் ராகுல் அங்கு கிட்டதட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து ஆந்திராவில் சில நாட்கள் அவர் பாத யாத்திரை மேற்கொண்டார். ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரைக்கு மக்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
பிரேக்
குமரி முதல் இப்போது வரை இந்த பாத யாத்திரை திட்டமிட்டபடி சரியாகவே சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ந்து பயணித்தாலும் கூட ராகுல் காந்தி பாத யாத்திரையில் எந்தவொரு நாளும் ரெஸ்ட் எடுக்கவில்லை. இதனிடையே பாத யாத்திரையில் இருந்து ராகுல் காந்தி முதல் முறையாக பிரேக் எடுக்க உள்ளார். அதாவது வரும் அக். 26ஆம் தேதி பாத யாத்திரையில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
என்ன காரணம்
அன்றைய தினம் ராகுல் காந்தி டெல்லி செல்ல உள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் வரும் 26ஆம் தேதி தலைவர் பதவியை ஏற்க உள்ளார். ஏற்கனவே தீபாவளி காரணமாக 24,25 பாத யாத்திரை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது 26ஆம் தேதியும் பாத யாத்திரை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவர் பதவியில் பொறுப்பேற்க உள்ளார். இதன் காரணமாகவே பாத யாத்திரையில் பிரேக் எடுத்துவிட்டு டெல்லி செல்கிறார்.
கார்கே
பாத யாத்திரை தொடங்கிய பின்னர் ராகுல் காந்தி அதில் பிரேக் எடுப்பது இதுவே முதல்முறையாகும். டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. அப்போது கார்கே கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பார். முன்னதாக கட்சியில் தனது பொறுப்பை புதிய தலைவரே முடிவு செய்வார் என்று ராகுல் காந்தி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர்
இப்போது காங்கிரஸ் இடைக்கால தலைவராகச் சோனியா காந்தி உள்ளார். முன்னதாக இந்த பொறுப்பு ராகுல் காந்தியிடம் இருந்தது. இருப்பினும், 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பு ஏற்று ராகுல் காந்தி பதவி விலகினார். அவரை மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வலியுறுத்திய போதிலும் அவர் மறுத்துவிட்டார்.
தேர்தல்
இதையடுத்து காங்கிரஸ் புதிய தலைவரைத் தேர்வு செய்ய சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் வேட்பாளர்களாகக் களமிறங்கினர். இதில் 7897 வாக்குகளைப் பெற்று மல்லிகார்ஜுன கார்கே மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.