பீகாரில் கவிழ்கிறது ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு? சோனியாவை சந்திக்கிறார் முதல்வர் நிதிஷ்குமார்?
டெல்லி: பீகாரில் ஆளும் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு கவிழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரபரப்புக்கு இடையே காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
பீகார் மாநில சட்டசபைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ கூட்டணி அமைத்த போதும் ஜேடியூ அதிக இடங்களில் வெல்லாத வகையில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி மூலம் உள்ளடிவேலை பார்த்தது பாஜக.
பீகாரில் பாஜகவை வெறுப்பேற்றும் நிதிஷ்குமார்.. தேஜஸ்வி ஆதரவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு!
முதல்வர் நிதிஷ்குமார்
இதனால் பாஜக 77 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஜேடியூ 45 இடங்களிலும் வென்றன. இருந்தபோதும் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிப்படி ஜேடியூவின் நிதிஷ்குமாரை முதல்வராக்கி கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜக. ஆனால் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடிதான் பீகார் சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக தற்போது உள்ளது. அக்கட்சிக்கு மொத்தம் 80 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
தொடர் அதிருப்தி
பாஜகவுடன் ஜேடியூ கூட்டணி ஆட்சி அமைத்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக இரு கட்சிகளிடையே தொடர் மோதல் நீடிக்கிறது. ஜேடியூவின் அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏக்களை கூண்டோடு பாஜக வளைத்துப் போட்டது; மத்திய அமைச்சரவையில் 2 இடங்களை எதிர்பார்த்த ஜேடியூவுக்கு நோ சொன்னது பாஜக. இதனால் மத்திய பாஜக அரசின் நிகழ்ச்சிகளில் குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார் நிதிஷ்குமார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தையும் கூட நிதிஷ்குமார் புறக்கணித்திருந்தார்.
உடையும் ஜேடியூ?
மேலும் நிதிஷ்குமாரின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவரான ஆர்.பி.சிங், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிக்கினார். இதனால் ஜேடியூ கட்சியில் இருந்து வெளியேறினார் ஆர்.பி.சிங். அத்துடன் நிதிஷ்குமாருக்கு எதிராக தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் ஆர்.பி.சிங். கூறியுள்ளார். நிதிஷ்குமார் பக்கம் இருக்கும் ஜேடியூ எம்.எல்.ஏக்களை ஆர்.பி.சிங் பக்கம் பாஜக தாவ வைக்கும் சித்து விளையாட்டுகள் அரங்கேறும் நிலைமையும் உள்ளது.
பீகார் ஆட்சி கவிழ்கிறது?
இத்தகைய அரசியல் சூழ்நிலைகளால் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளும் ஜேடியூ- பாஜக கூட்டணி ஆட்சி கவிழவும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் லாலுவின் ஆர்ஜேடி கட்சியுடன் இணைந்து ஜேடியூ ஆட்சி அமைக்கவும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏக்களைத் தக்க வைக்கும் வகையில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளன. ஜேடியூ, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாட்னாவுக்கு வரவும் இந்த கட்சிகள் உத்தரவிட்டுள்ளன.