ராஜ்யசபாவில் நிறைவேறிய டெல்லி நிர்வாக மசோதா.. 6 மணி நேர விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேறியது!
டெல்லி: டெல்லி அதிகாரிகள் நியமன அதிகார மசோதா லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த மசோதா இப்போது ராஜ்யசபாவிலும் நிறைவேறியுள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. டெல்லி நாட்டின் யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக துணை நிலை ஆளுநருக்கும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. எனினும், உச்ச நீதிமன்றம் உத்தரவு வெளியான உடனேயே, இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.
அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததால் தற்போது அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு மாற்றாக நாடாளுமன்ற இரு சபைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்க வேண்டும் என்பதுதான் விதியாகும்.

எனவே, டெல்லி சேவைகள் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்ற முடிவு செய்தது. எனினும் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவை முடக்கத்துக்கு மத்தியிலும் சுமார் 20 மசோதாக்கள் இதுவரை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. லோக்சபாவில் 15 மசோதாக்களும், ராஜ்யசபாவில் 12 மசோதாக்களும் நிறைவேறியுள்ளன. இதில் 9 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. வனப்பாதுகாப்பு திருத்த மசோதா, உயிரியியல் பன்முகத்தன்மை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் இதில் அடங்கும்.
இந்த நிலையில், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட டெல்லி நிர்வாக மசோதா, இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.. இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட எதிர்க்கட்சிகள் தங்கள் எம்.பிக்களுக்கு இன்று கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தது. ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகளின் பலத்தைச் சோதிக்கும் விதமாக இந்த மசோதா அமையும் என சொல்லப்பட்டது.
ராஜ்யசபாவில் தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளன. ராஜ்யசபாவின் மொத்த பலம் தற்போது 237- ஆகும். இந்த மசோதாவை நிறைவேற விடாமல் தடுக்க எதிர்க்கட்சிகளுக்கு 119 உறுப்பினர்கள் பலம் தேவை. அதேவேளையில், எந்த கூட்டணியில் சேராத பிஜு ஜனதா தளம், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஆளும் பாஜகவுக்கு கை கொடுப்பதாக இருந்தது.
இதற்கிடையே இந்த மசோதாவுக்கு ஆதரவாக 131 பேரும் எதிராக 102 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேறியது.












Click it and Unblock the Notifications