மக்களுடன் அதிகமாக தொடர்பில் இருக்க 'பாஜக ஒற்றுமை பிரச்சாரம்'.. செயற்குழு கூட்டத்தில் மோடி பேச்சு
டெல்லி: பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களுக்கும் கட்சிக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் "பாஜக ஒற்றுமை பிரச்சாரம்" மேற்கொள்ளப்படும் என்றும், அப்போதுதான் மக்களுடன் இன்னும் அதிகமாக தொடர்பில் இருக்க முடியும். நமது வளர்ச்சி திட்டங்கள் ஊரக பகுதிகளையும் போய் சேரும் என்றும் பிரதமர் மோடி பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டிற்கு மேல் இருந்தாலும் தற்போதே ஆளும் பாஜக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
அதேபோல், இந்த ஆண்டில் மட்டும் கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
நடைமுறைக்கு வந்தது அக்னி வீரர்கள் திட்டம்- முதலாவது குழுவினருடன் பிரதமர் மோடி உரையாடல்!
பாஜக செயற்குழு கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செமி பைனல் போல நடக்கும் இந்த தேர்தலில் வெறி பெறுவது முக்கியம் எனக் கருதும் அரசியல் கட்சிகள் தற்போதே பிரசாரங்களை கூட மேற்கொள்ள தொடங்கிவிட்டன. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புது டெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்களாக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல்
இந்தக் கூட்டத்தில் தேசிய தலைவராக ஜேபி நட்டாவின் பதவிக்காலம் வரும் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டு நாட்களும் கலந்து கொண்டார். நாடு முழுவதிலும் இருந்து பாஜகவின் தலைவர்கள் சுமார் 350க்கும் மேற்பட்டவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். இன்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 400 நாட்களே எஞ்சியுள்ளன என்றும் டாப் கியரில் பணியை தொடங்குவதற்கான தருணம் இது எனவும் கூறியதாக பாஜக மூத்த தலைவரும் மகராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
ஒற்றுமை பிரச்சாரம்
செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? என்பது குறித்த விவரங்களை தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறினார். தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்கு 400 நாட்களே எஞ்சியுள்ளது. டாப் கியரில் பணிகளை தொடங்குவதற்கான நேரம் இது. மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். நாம் புதிய வரலாறு படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், மக்களுக்கும் கட்சிக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் பாஜக ஒற்றுமை பிரச்சாரம் ஏற்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
கிராமங்களில் நடத்த வேண்டும்
மேலும், ஒன் இந்தியா, சுப்ரீம் இந்தியா என்பதை நோக்கி பாஜகவினர் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய மோடி, சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் குறிப்பாக எல்லையோர கிராமங்களில் இவற்றை நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களுடன் இன்னும் அதிகமாக தொடர்பில் இருக்க முடியும். நமது வளர்ச்சி திட்டங்கள் ஊரக பகுதிகளையும் போய் சேரும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அவர்களுக்கு தெரியாது
18-25 வயதுக்கு உள்பட்ட இளம் வாக்காளர்கள் இந்திய அரசியல் வரலாற்றை அதிகம் பார்த்து இருக்க மாட்டார்கள். முந்தைய அரசாங்கம் செய்த தவறுகள் மற்றும் ஊழல்களை பற்றி அவர்களுக்கு தெரியாது. எனவே அவற்றை பற்றியும் பாஜகவின் நல்ல ஆட்சி நிர்வாகம் பற்றியும் அவர்களுக்கு அறியவைக்க வேண்டியது அவசியம். இதேபோல் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாக நாம் கருதக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
பா.ஜ.க. மிகப்பெரும் வெற்றியை பெறும்
முன்னதாக செயற்குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜே.பி. நட்டா தலைமையில் பா.ஜ.க. மிக பெரும் வெற்றியை பெறும். மீண்டும் பிரதமராக மோடி நாட்டை வழிநடத்தி செல்வார் என்று கூறினார். மேலும், நாட்டில் ஜனநாயக ரீதியில் இயங்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே என்றும் நமது உள்கட்சி தேர்தல்கள் கட்சி விதிகள்படி உரிய நேரத்தில் நடத்தப்படுவதாகவும் அமித்ஷா கூறினார்.