மத்திய பாஜக அரசால் தமிழகம் புறக்கணிப்பு: திமுக எம்பிக்கள் டெல்லியில் கறுப்பு உடை அணிந்து போராட்டம்!
டெல்லி: தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சி எம்.பிக்களும் பங்கேற்றனர்.
மத்திய நிதி நிலை அறிக்கை- பட்ஜெட் 2024 பிப்ரவரி 1-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து திமுக எம்பிக்கள் டெல்லியில் கறுப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்துவார்கள் எனவும் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகாலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 இலட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 இலட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலுவும் டெல்லியியில் திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார். இதனடிப்படையில் இன்று டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக அனைத்து திமுக எம்பிக்களும் கறுப்பு உடை அணிந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சி எம்பிக்களும் பங்கேற்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
இப்போராட்டதில் பங்கேற்ற சிபிஎம் சு.வெங்கடேசன் எம்பி, மிக்ஜாம் புயலும் , பெருமழையும் தமிழ்நாட்டின் இரண்டு முனைகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயம் , வேலையிழப்பு , கால்நடைகள் இறப்பு , வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்றது அந்தப் பேரிடர். ஆனால் ஒன்றிய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும் வழங்கவில்லை. ஒன்றிய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற காந்திசிலை முன்பு தமிழக எம் பிக்கள் ஆர்ப்பாட்டம்."நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை - எங்களின் உரிமையைத் தாருங்கள் " இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications