இந்துக்கள், முஸ்லிம் அல்லாத சிறுபான்மை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை- தாக்கலாகும் சட்ட திருத்த மசோதா
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
1955-ம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்குள்ளாகி இந்தியாவுக்குள் இடம்பெயர்ந்திருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
இப்படி இடம்பெயர்ந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாத போது இந்திய குடியுரிமை வழங்கப்படும். அதேநேரத்தில் இந்த நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர் என்பதால் அங்கிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்திருந்தாலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது.
மிஸ் செய்கிறோம்.. டிரம்பின் நக்கல் ட்வீட்டுக்கு நறுக்கென கிண்டலாக பதில் அளித்த கமலா ஹாரிஸ்
எதிர்க்கும் வடகிழக்கு
ஆனால் வடகிழக்கு மாநிலங்கள் இக்குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஏனெனில் இடம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது என்பது தங்களது பகுதிகளில் தங்களது தனித்தன்மையை பாதிக்கும் என்பது அவர்களது கருத்து.
மசோதா குறித்து ஆலோசனை
அதேபோல் இந்துக்களின் வாக்கு வங்கிகளை ஒருமுகப்படுத்தும் நோக்கில் இம்மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அஸ்ஸாம் மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் அமைப்புகளுடன் இம்மசோதா குறித்து ஆலோசனை நடத்தினார்.
பாதிப்பு குறித்து விளக்கம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில பூர்வகுடிமக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அனைத்து அஸ்ஸாம் மாணவர் யூனியன் உள்ளிட்ட அமைப்புகள் அமித்ஷாவிடம் விளக்கி உள்ளன.
அமித்ஷாவின் 3-வது கூட்டம்
இம்மசோதா தொடர்பாக வடகிழக்கு மாநில முதல்வர்கள் மற்றும் அமைப்புகளுடன் அமித்ஷா ஏற்கனவே வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையும் ஆலோசனை நடத்தியிருந்தார். டெல்லியில் நேற்று நடைபெற்றது 3-வது ஆலோசனைக் கூட்டமாகும்.
அஸ்ஸாம் கன பரிஷத் ஆதரவு
இம்மசோதாவை எதிர்ப்பதாக முன்னர் அறிவித்திருந்த பாஜகவின் கூட்டணி கட்சியான அஸ்ஸாம் கன பரிஷத் தற்போது மத்திய அரசின் இந் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அனைத்து அஸ்ஸாம் மாணவர் யூனியன் மூத்த ஆலோசகர் சமுஜ்ஜால் பட்டாச்சார்யா, குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாட்டுக்கு நல்லதுதான். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு நல்லது அல்ல.
நாடாளுமன்றத்தில் தாக்கல்
இம்மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்றார். இத்தகைய சர்ச்சைக்குரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.