தடுப்பூசி உற்பத்தி சிக்கலான ஒரு செயல்முறை.. ஒரே இரவில் உற்பத்தியை அதிகரிக்க முடியாது..ஆதார் பூனவல்லா
டெல்லி: தடுப்பூசியை உற்பத்தி செய்வது என்பது ஒரு சிக்கலான செயல்முறை எனக் குறிப்பிட்டுள்ள சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா, ஒரே இரவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்,
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு சீரம் நிறுவனத்திடம் புதிதாக எவ்வித ஆர்டர்களை அளிக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
கொரோனா 2ஆம் அலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், மத்திய அரசு பொறுப்பில்லாமல் செயல்பட்டு வருவதாகப் பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்துக்களில் உண்மை இல்லை என சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா மறுத்துள்ளார்.

26 கோடி கொரோனா தடுப்பூசிகள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 26 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஆர்டரை பெற்றுள்ளோம். அதில் 15 கோடி தடுப்பூசிகள் ஏற்கனவே விநியோகிப்பட்டுவிட்டன. வரும் வாரங்களில் மேலும் 11 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்படும். அதற்கான 1,732.50 கோடி ரூபாயையும் அரசு எங்களுக்கு அளித்துள்ளது. இதுதவிர கூடுதலாக 11 கோடி தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கவுள்ளோம்

மக்கள் தொகை அதிகம்
இந்தியாவின் மக்கள் தொகை மிகவும் அதிகம், எனவே இத்தனை கோடி பேருக்குத் தடுப்பூசியை உற்பத்தி செய்வது என்பது எளிதான பணி இல்லை. உலகளவில் மிகவும் வளர்ந்த நாடுகளும் மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடுகளும்கூட இதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒரே இரவில் அதிகரிக்க முடியாது
தடுப்பூசி விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும் தடுப்பூசி உற்பத்தி செய்வது என்பது ஒரு சிக்கலான செயல்முறை. ஒரே இரவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியாது. முடிந்தவரை உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

ஜூலை வரை பற்றாக்குறை இருக்கும்
கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற இந்தியாவுக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம். புனேவில் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி என்பது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும்கூட வரும் ஜூலை மாதம் வரை கொரோனா தடுப்பூசிக்கான பற்றாக்குறை என்பது இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications