உச்சம் தொட்ட பணப்புழக்கம்.. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் எப்படி? அதிர்ச்சி தரும் டேட்டா
டெல்லி: மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, முதன்முறையாக மக்களிடத்தில் பணப்புழக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.
பணமதிப்பு நீக்கத்தால் இனி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கணிசமாக குறைந்துவிடும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு அதற்கு எதிர்மாறாக பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக 'இண்டியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தீமையிலும் நன்மை உண்டு என்பது போல, நாட்டின் பொருளாதாரத்தை அதள பாதாளத்துக்கு கொண்டு சென்ற கொரோனா பெருந்தொற்றுதான், இன்று இந்த ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரித்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் நிஜம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

நாட்டை புரட்டிப்போட்ட பணமதிப்பு நீக்கம்..
2016-ம் ஆண்டு நவம்பர் 4. இந்தியர்கள் எவராலும் மறக்க முடியாத தேதி அது. திடீரென அன்றைய தினம் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். கருப்புப் பணத்தையும், லஞ்சத்தையும் ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத இந்த அறிவிப்பு, அடுத்தடுத்த நாட்களில் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியது. மக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காகவும், ரூபாயை எடுப்பதற்காகவும் வங்கி - ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

குறைந்துபோன பண இருப்பு..
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களின் உயிரை ஒருபுறம் காவு வாங்க, மறுபுறம் சிறு, குறு தொழில்களை அடித்து நொறுக்கியது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான சிறு குறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். மேலும், இந்த நடவடிக்கையால் நாட்டின் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் புழக்கம் குறைந்து போனது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு (ஜிடிபி) முக்கியமே மக்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் இருப்புதான். அப்படி இருக்கையில், அதுவே அடிவாங்கியது நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்தது. அதாவது, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது ரூ.17.7 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம் (ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள்) மூன்றே மாதத்தில் ரூ.7.8 லட்சம் கோடியாக குறைந்தது. அதன் பின்னர், இது சிறிது சிறிதாக அதிகாரித்தாலும் பெரிய அளவில் ஏற்றம் காணப்படவில்லை.

உச்சம் தொட்ட அதிசயம்..
இந்நிலையில், பணமதிப்பிழக்கு நடவடிக்கைக்கு பிறகு 6 ஆண்டுகள் கழிந்த நிலையில், அதிசயத்தக்க வகையில் நாட்டின் பணப்புழக்கம் உச்சம் தொட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 21-ம் தேதி ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஆய்வில், நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி என்பது கண்டறியப்பட்டது. அதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இருந்த ரூ.17.7 லட்சத்தை விட இது ரூ.12.91 லட்சம் அதிகம் ஆகும்.

இரக்கம் காட்டிய கொரோனா..
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும், பணப்புழக்கம் புதிய உச்சத்தை தொட்டிருப்பது பொருளாதார நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமல்லாமல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு ஏராளமான மக்கள் மாறிய பிறகும், இது எப்படி சாத்தியம் என ஆராய்ந்த போது தான் அதற்கான காரணம் 'கொரோனா தொற்று' எனத் தெரியவந்தது. கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை, மக்களிடத்தில் ஒரு நிச்சயமற்ற சூழலையும், ஒருவித அச்சத்தையும் விதைத்தது. இதனால் பணம் சம்பாதிப்பதிலும், கிடைத்த பணத்தை சேமித்து வைப்பதிலும் மக்கள் தீவிரம் காட்ட தொடங்கினர். மேலும், செலவு செய்வதையும் குறைத்தனர். இதன் காரணமாகவே, மக்களிடத்தில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications