ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம். இவ்வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் சிதம்பரம்.
இம்மனு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், நிதி அமைச்சர் பதவியில் இருப்பவர்களை நூற்றுக்கணக்கானோர் சந்திப்பது வழக்கம். அமைச்சக வருகைப் பதிவேட்டில் அது இடம்பெற்றிருக்கும். இந்திராணி முகர்ஜியை ப.சிதம்பரம் ஒருபோதும் சந்திக்கவில்லை என வாதிட்டார்.
சிதம்பரத்துக்கு ஜாமீன் தரவே கூடாது என சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார். அப்போது, நிதி அமைச்சக்கத்தின் வருகைப் பதிவேடு அழிக்கப்பட்டிருக்கிறது. இந்திராணி முகர்ஜி இவ்வழக்கில் அப்ரூவராகி இருக்கிறார். தாம் ஒரு எம்.பி. என்பதால் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல மாட்டேன்- பொறுப்புள்ள குடிமகன் என சிதம்பரம் கூறுவதை ஏற்க முடியாது.
ஏற்கனவே ஒரு எம்.பி. நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார். சிதம்பரம் எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் அங்கே நிரந்தரமாக தங்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்.
மேலும் ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தொடர்ந்து ஒத்துழைப்பும் தருவதில்லை. அவரை வெளியேவிட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என துஷார் மேத்தா வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கூறினார்.