ப.சிதம்பரத்திற்கு ஜாமீனும் இல்லை.. திகார் சிறையும் இல்லை.. மேலும் ஒரு நாள் சிபிஐ காவலுக்கு உத்தரவு
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிக்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு செய்ததாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டார். பின்னர் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் 14 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். அவரது சிபிஐ காவல் இன்றுடன் முடிந்தது. இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஜாமீன்
அப்போது நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் உடனடியாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம். அவரது மனுவை கீழமை நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒரு வேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் வரும் வியாழக்கிழமை வரை அவரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
ப.சிதம்பரம்
இந்த நிலையில் இதை எதிர்த்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது நாளை வரை மட்டுமே ப.சிதம்பரம் சிபிஐ காவல் நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றனர்.
விசாரணை
அதற்கு நீதிபதியோ நாளை வரை சிபிஐ காவலை நீட்டிப்பது குறித்து கீழமை நீதிமன்றத்தில் முறையிடலாம். சிபிஐ கோரிக்கையை நாளை மதியம் விசாரணை செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
ப.சிதம்பரம்
இந்த நிலையில் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததால் ப.சிதம்பரத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
நோட்டீஸ் அனுப்ப
இதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் ஆதாரங்களை அழித்துவிடுவார். ப. சிதம்பரம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதால் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சிபிஐ தெரிவித்தது.
மனிதனுக்கு
அப்போது நீதிபதி கூறுகையில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்றே முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது, என்ன செய்யலாம் என கேள்வி எழுப்பினார். அப்போது சிபிஐ வழக்கறிஞர் ப.சிதம்பரத்துக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை. இதே சலுகை சாதாரண மனிதனுக்கு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பியது.
நாளை மீண்டும் விசாரணை
இந்த நிலையில் ப.சிதம்பரத்தை மேலும் ஒரு நாள், அதாவது நாளை வரை காவலை நீட்டிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு நாளை மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார். இன்று ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பின் கோரிக்கையை ஏற்று நாளை வரை சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.