இது வங்கம்.. மோடியின் முடிவு காலம் நெருங்கிவிட்டது.. மமதா பகீர் சவால்!
பிரதமர் மோடியின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேட்டியளித்து இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடியின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேட்டியளித்து இருக்கிறார்.
சிபிஐக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக அவர் தர்ணா செய்து வருகிறார். மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்றாமல் விடமாட்டேன் என்று மமதா சபதம் செய்து இருக்கிறார்.
மோடி முடிவு
இந்த நிலையில் தர்ணாவின் போது மமதா பானர்ஜி அளித்த பேட்டியில், இன்றில் இருந்து மேற்கு வங்கம் முழுக்க திரிணாமுல் காங்கிரஸ் அமைதி போராட்டம் நடத்தும். பிரதமர் மோடிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது. மோடியின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது. இவர்களை முதலில் மத்தியில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மத்திய ஆட்சியை அகற்றுவதுதான் அவசர தேவை.
பாஜக என்ன செய்யும்
எங்களை ஒடுக்குவதற்கு பாஜக என்ன செய்யும் என்று பார்க்கலாம். அவர்களால் செய்ய முடிந்தது என்னவோ அதை செய்யட்டும். அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லட்டும். எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
வரலாறு
என்ன செய்வார்கள் அவர்கள். மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வருவார்களா? மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தாலும் பிரச்சனையில்லை. இது வங்கம்.. உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும் நாங்கள் எப்படி என்று.. கொஞ்சம் வரலாற்றை புரட்டி பாருங்கள்.. நாங்கள் அநீதியை எப்படி எதிர்த்து இருக்கிறோம் என்று.
பார்க்கலாம்
இந்த தேசத்தை உடைக்க வந்தவர்களை நாங்கள் எப்படி எதிர்த்தோம் என்று வரலாறு அறியும். அது இப்போது மீண்டும் நடக்கும். அரசியலமைப்பை காப்பாற்ற என்னுடைய போராட்டம் தொடரும். இவர்கள் தொடர்ந்து நாட்டை ஆண்டால் இந்த நாடு முடிவிற்கு வந்துவிடும். இந்த போரின் இறுதியை எனக்கு பார்க்க வேண்டும், என்று மிகவும் கோபமாக பேசி இருக்கிறார்.