கர்ப்பிணிகளுக்கு கொரோனா வேக்சின் போடலாம்.. ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்.. எந்தளவு பாதுகாப்பை தரும்?
டெல்லி: நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவித்துள்ள நிலையில், விரைவில் இதற்கான மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன் பின்னர் தடுப்பூசி பணிகள் மேலும் வேகம் பெற்றன.

கொரோனா தடுப்பூசி
தற்போது நாட்டில் 18+ அனைவருக்கும் வேக்சின் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதலில் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து மத்திய அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

கர்ப்பிணிகளுக்கு வேக்சின்
இருப்பினும், கர்ப்பிணிகள் கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்வது பற்றி மத்திய அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமலேயே இருந்தது. இந்நிலையில், நேற்று கர்ப்பிணிகளுக்கும் கொரோனா வேக்சின் செலுத்தலாம் என்றும் அது அவர்களை பாதுகாக்கும் என்றும் ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையும் இதற்கேற்ப மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயனுள்ளதாகவே இருக்கும்
கொரோனா தடுப்பூசிகளைக் கர்ப்பிணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதனை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தான், கர்ப்பிணிகளுக்கு கொரோனா வேக்சின் செலுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2ஆம் அலையில் கொரோனா பாதிப்பு 28.7% வரை அதிகமாக இருந்தது. அதேபோல கர்ப்பிணி & பாலூட்டும் தாய்மார்கள் கொரோனாவால் உயிரிழப்பதும் 5.7% வரை அதிகரித்திருந்தது. கர்ப்பிணிகள் பெரும்பாலும் கொரோனாவால் ஏற்படும் நிமோனியா பாதிப்பாலேயே உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,












Click it and Unblock the Notifications