விஷம பிரச்சாரம்: 35 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு.. காரணம் என்ன?
டெல்லி: இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக பாகிஸ்தானை சேர்ந்த 35 யூடியூப் சேனல்கள் மற்றும் இரு இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த டிஜிட்டல் மீடியா தளங்களில் இந்தியாவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் விமான விபத்தில் காலமானது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் சேனல்கள் அவதூறு பரப்பி வந்தன.
இந்த நிலையில்தான் 35 யூடியூப் சேனல்கள் இந்தியா தொடர்பான உணர்வுப்பூர்வமான விஷயங்களில் பொய்யான செய்தியை பரப்பியதால் முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
'நாட்டுக்கு எதிராக சதி செய்யும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படும்'.. மத்திய அமைச்சர் அதிரடி வார்னிங்!
என்னென்ன சானல்கள்
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், பாகிஸ்தானால் இயக்கப்படும் 35 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முடக்குகிறது. அதில் அப்னி துனியா நெட்வொக்கின் 14 யூடியூப் சேனல்களும் தல்ஹா பிலிம்ஸ் நெட்வொர்க்கின் 13 யூடியூப் சேனல்களும் அடங்கும்.
சேனல்கள்
இவர்கள் பரப்பிய அத்தனை வீடியோக்களும் இந்தியா குறித்து உணர்வுப்பூர்வமான விஷயங்களாகும். இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் விவகாரம், மற்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் நல்லுறவு உள்ளிட்டவைகள் குறித்தும் இந்த சேனல்கள் அவதூறு பரப்பியிருந்தன.
2 இன்ஸ்டாகிராம் கணக்குகள்
அத்துடன் நடக்கவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருந்தன. மேலும் இவர்களது வீடியோக்கள் இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்பதால் பாகிஸ்தானை சேர்ந்த 35 யூடியூப் சேனல்கள், 2 இன்ஸ்டாகிராம், டிவிட்டர் கணக்குகள் ஆகியவற்றுடன் 2 இணையதளத்தையும் முடக்கியுள்ளோம்.
20 சேனல்கள் முடக்கம்
இந்தியாவுக்கு எதிராக பொய்யான தகவலை பரப்பிய சேனல்களுக்கு மொத்தம் 1.20 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களது வீடியோக்களை 130 கோடி பேர் பார்த்துள்ளனர் என அந்த உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி பாகிஸ்தானின் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரு இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.