விட்டுக் கிழிக்கும் எதிர்க்கட்சிகள்.. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு யோசனை
டெல்லி: ஐந்து மாநில தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
'பெட் கட்டி சொல்றேன்.. இன்னைக்கும் பெட்ரோல் விலை உயரும்' என்றான் நண்பன்.. அவ்ளோ கான்ஃபிடன்ட் அவனுக்கு. அந்த அளவுக்கு இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நொந்து போயுள்ளனர் சாமானிய மக்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூன், ஜுலை மாதங்களில் இருந்து விலை கடுமையாக உயரத் தொடங்கியது.
சென்னையில் இன்று (மார்ச்.10) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு ரூ.86.45 என்று விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம், மேற்குவங்கம் உட்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசாங்கம் எரிபொருள் விலையை கட்டுப்படுத்தலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஆலோசனைகள் நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், எதிர்க்கட்சிகள் தங்களது பிரச்சாரங்களில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை தான் முக்கிய ஆயுதமாக கையில் எடுக்கின்றனர். மக்களும் அதிருப்தியில் உள்ளதால், எதிர்க்கட்சிகளின் வியூகம் எடுபட்டுவிடுமோ என்று மத்திய அரசு யோசிக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒரு முக்கியமான வருவாய் ஆதாரமாகும். கோவிட் -19 காரணமாக லாக் டவுனில் இருந்ததால், அரசுகளுக்கு வருவாய் ஈட்டுவது என்பது பெரும் சிக்கலாக உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எரிபொருள் மீதான வரி மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் ஆண்டுக்கு ரூ .5.5 லட்சம் கோடியாக உள்ளது. எரிபொருள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட்டால், மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ரூ .2.5 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும்.