தமிழகத்தில் மே 29 முதல் 31 வரை கொரோனா தாக்குதல் உச்சகட்டமாக இருக்கும்- விஞ்ஞானிகள் முன்னெச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் தற்போதைய கொரோனா 2-வது அலை ஜூலை மாதம் முடிவுக்கு வரும் என்றும் 6 மாதங்களுக்குப் பின்னர் கொரோனா 3-வது அலை தாக்கும் என்றும் மத்திய அரசுக்கு விஞ்ஞானிகள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் வரும் 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா 2-வது அலை மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கொத்து கொத்தாக பாதிப்புகள், மரணங்கள் என நாட்டின் அனைத்து மாநிலங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய கொரோனா 2-வது அலையின் உச்சகட்டம் மெல்ல மெல்ல குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே மத்திய அரசு அமைத்த 3 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு சில முன்னெச்சரிக்கைகளை விடுத்திருக்கிறது.
இனி வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்... ரேப்பிட் ஆன்டிஜன் முறைக்கு.. ஐசிஎம்ஆர் அனுமதி
கொரோனா 2-வது அலை எப்போது ஓயும்?
இது தொடர்பாக மத்திய அரசின் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் மணீந்தரா அகர்வால் கூறியதாவது: மே மாதம் இறுதியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சமாக குறையும். ஜூன் மாதம் இறுதியில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 20,000 என வெகுவாக குறையும்.
தமிழகத்துக்கு முன்னெச்சரிக்கை
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்தரகாண்ட், குஜராத், ஹரியானா, டெல்லி, கோவா ஆகிய மாநிலங்கள் கொரோனாவின் உச்சகட்ட தாக்குதலை எதிர்கொண்டுவிட்டன. தமிழகத்தில் மே 29-31 தேதிகளில் உச்சகட்டமான கொரோனா தாக்குதல் இருக்கும். புதுச்சேரியில் மே 19, 20 ஆகிய நாட்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
அஸ்ஸாம், திரிபுரா
அஸ்ஸாம் மாநிலத்தில் மே 20,21 ஆகிய நாட்களில் அதிக பாதிப்பு இருக்கக் கூடும். திரிபுராவில் மே 26,27-ல் கூடுதல் பாதிப்பு ஏற்படும். இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகமாக உள்ளது. மே 24-ல் இமாச்சல பிரதேசத்திலும் மே 22-ல் பஞ்சாப்பிலும் அதிக பாதிப்பு ஏற்படும்.
கொரோனா 3-வது அலை
கொரோனா 3-வது அலை என்பது அடுத்த 6 அல்லது 8 மாதங்களில் வரும். ஆனால் கொரோனா 3-வது அலை பொதுமக்களை பெருமளவு தாக்காது ஏனெனில் அப்போது பொதுமக்கள் கொரொனா தடுப்பூசிகளை போட்டிருப்பர். அப்படி உருவாகும் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் வரை கூட நீடிக்காது. இவ்வாறு பேராசிரியர் மணீந்தரா கூறினார்.