தொடங்கியது 3ஆம் அலை? மீண்டும் உயரும் கொரோனா.. அடுத்த 100 நாட்கள் மிக முக்கியம்.. புதிய வார்னிங்
டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிக முக்கியமானவை என எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரைக் கூட சென்றது.
இப்போதுதான் கொரோனா பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 2,312 பேருக்கு கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்!
தடுப்பாற்றல்
நாட்டிலுள்ள பல்வேறு ஆய்வாளர்களும் கொரோனா 3ஆம் அலை குறித்து எச்சரித்து வரும் நிலையில், மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால், "சமூக தடுப்பாற்றல் பெறும் நிலையை நாம் இன்னும் எட்டவில்லை. கொரோனா பரவல் மூலம் சமூக தடுப்பாற்றலை பெற நாங்கள் விரும்பவில்லை.
வேக்சின் பணிகள்
தடுப்பூசிகள் மூலமே இந்த சமூக தடுப்பாற்றலை ஒருவர் அடைய வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட, எளிதில் வைரசால் பாதிக்கப்படக்கூடியவர்களில் கிட்டத்தட்ட 50% பேருக்கு ஏற்கனவே வேக்சின் போட்டுவிட்டோம். இது உயிரிழப்பு விகிதத்தைக் குறைக்கும். ஆனால் வைரஸ் பரவல் நிச்சயம் இருக்கும். வைரஸ் நம்மைச் சுற்றி இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
100-125 நாட்கள்
அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிக முக்கியம். நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும்கூட, இது நமக்குத் தெரியும் முதல் எச்சரிக்கை. நிலைமை மேலும் மோசமாகலாம். ஆனால், இது நம் கையில் தான் இருக்கிறது. கொரோனா வழிகாட்டுதல்களை நாம் முறையாகக் கடைப்பிடித்தால், 3ஆம் அலை ஏற்படுவதை தடுக்கலாம்.
பாதுகாப்பு
வேக்சின் பணிள் வேகமெடுத்து, அடுத்த 3-4 மாதங்களில் அதிகப்படியான மக்களுக்கு நாம் வேக்சின்களை செலுத்திவிட்டால், அப்போது நாம் பாதுகாப்பான இடத்தை அடையலாம். அடுத்த 125 நாட்கள் மக்களுக்கும் முக்கியமானது, அரசுக்கும் முக்கியமானது. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
Array
நாட்டில் கொரோனா வேகமாகப் பரவுவதைக் குறிக்கும் R- ஃபேக்டர் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகமாக உள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சரின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், "கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும் இன்னும் சில கவலைகள் உள்ளன. நாட்டிலுள்ள 12 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 10% மேல் உள்ளது. அதேபோல 73 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.
மாஸ்க்குகள்
கொரோனா 2ஆம் அலை நாட்டில் இன்னும் முடியவில்லை. அதை எதிர்த்து நாம் போராடி வருகிறோம். அதேபோல நாட்டில் மாஸ்க் அணியும் பழக்கமும் குறைந்து வருகிறது. மாஸ்க்கை நாம் வாழ்க்கையில் ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, மக்கள் வழக்கமாக தங்கள் பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர். கொரோனா வழிகாட்டுதல்களை பலரும் பின்பற்றுவதில்லை.
உலக நாடுகள்
உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மியான்மார், இந்தோனேசியா, மலேசியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. வேக்சின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 15 நாட்களுக்கு எத்தனை வேக்சின் கிடைக்கும் என்பதை மத்திய அரசு முன்கூட்டியே தெளிவுபடுத்திவிடுகிறது. மாநில அரசுகள் அதற்கேற்ப வேக்சின் பணிகளுக்குத் திட்டமிட வேண்டும்.
Recommended Video
வேக்சின் தட்டுப்பாடு
வேக்சின் உற்பத்தி எப்படி இருக்கிறதோ, அதற்கேற்ப அவை மாநிலங்களுக்கு மத்தியில் பகிரப்படுகிறது. அதேபோல விநியோக சங்கிலியிலும் சிக்கல் உள்ளது. வரும் காலத்தில் இந்தப் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மாடர்னா வேக்சினை இந்தியாவுக்கு விரைவாகக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.