கொரோனா தடுப்பூசிகளுக்கான கால அவகாசம்.. அரசு அறிவிப்பும் CoWIN இணையதள குழப்பங்களும்!
டெல்லி: கொரோனா தடுப்பூசி தொடர்பாக CoWIN இணையதளப் பயன்பாட்டில் நீடிக்கும் பல்வேறு குழப்பங்கள், சந்தேகங்களை மத்திய அரசு நீக்கினால் இன்னமும் எளிதாக இருக்கும் என்பது பொதுமக்கள் கருத்து.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்வதற்காக https://www.cowin.gov.in/home - இணையதளம் உதவுகிறது. இந்த தளத்தில் கேட்கப்படும் தொலைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றுடன் மாநிலம், மாவட்டம் தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு
இதன் பின்னர் உங்கள் மாவட்டத்தில் எந்தெந்த அரசு சார் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்கிற விவரங்கள் இருக்கும். அதில் நாம் தடுப்பூசி போடுவதற்கான தேதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
இணையத்தில் சிக்கல்
மேலோட்டமாக இதனை பார்க்கும் போது சரியானதாகவே இருக்கும். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக நான் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்து பார்த்தேன். திண்டுக்கல் மாவட்ட அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் போடப்படும் என்கிற தகவல்தான் இதில் உள்ளது. அதுவும் கோவிஷீல்டு மட்டும்தான் போடப்படுவதாக உள்ளது. சரி 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு எங்கே தடுப்பூசி போடுவார்கள்? கோவாக்சின் எங்கே போடப்படும் என்கிற விவரங்கள் இல்லை. இதை யாரிடம் கேட்டு பெறுவது? என்கிற வழிகாட்டுதலும் இதில் கிடைக்கவில்லை.
3 மாத அவகாசம்
இதுமட்டுமின்றி.. அண்மையில் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்; காத்திருப்பவர்கள் முதலில் போட்டுக் கொள்ளட்டும் என்பது மத்திய அரசின் அறிவிப்பு. அதாவது கொரோனா சிகிச்சை முடிந்து வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சிறிது காலம் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாட்டை வல்லுநர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு அறிவித்தது.
கேள்வியே கேட்கவில்லை
ஆனால் கொரோனா தடுப்பூசி பதிவு இணையதளத்தில் இது தொடர்பான எந்த ஒரு அப்டேட் கேள்வியும் இடம்பெறவில்லை. பல இடங்களில் கொரோனா சிகிச்சை முடிந்து திரும்பியவர்கள், சில நாட்களிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் சென்றனர். அந்த மையங்களில் கூட நீங்கள் கொரோனா சிகிச்சை எடுத்துள்ளீர்களா? என்பது போன்ற எந்த கேள்விகளும் கேட்கவும் இல்லை என்கின்றனர்.
சந்தேகங்களுக்கு தீர்வு வேண்டும்
ஆகையால் இத்தகைய குளறுபடிகளை சற்றே களைந்து மக்களுக்கு எழும் சந்தேகங்கள், எழக்கூடிய வாய்ப்புள்ள சந்தேகங்கள் அவற்றுக்கான தீர்வுகள் என மேலும் பல அம்சங்கள் இணையதளத்திலும் செயலிகளிலும் இணைக்கப்படும் போது கொரோனா தடுப்பூசி திட்டம் முழுமையாக வெற்றி அடையும் என்பது பயனாளர்கள் கருத்து.