இதுவரை தொட்டதெல்லாம் வெற்றி கூட்டணிதான்.. மோடிக்கு கடும் சவாலாக உருவாகியுள்ள சந்திரபாபு நாயுடு!
Recommended Video
டெல்லி: ஒருவகையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்க்கை, வியாழக்கிழமையான நேற்று ஒரு வட்டத்திற்குள் நிறைவடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து புதிய கூட்டணிக்கான முயற்சியை முன்னெடுப்பதன் மூலம், சந்திரபாபு நாயுடு வலுவான மாநில கட்சியின் தலைவராக தன்னை உருவகப்படுத்தியுள்ளார்.
ஆனால் இதே தெலுங்கு தேசம் கட்சி, 1983 சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு கவுரவம் என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்தது.
[போஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. பாஜக அதிர்ச்சி.. உற்சாகத்தில் காங்கிரஸ்!]
காங்கிரசின் குழந்தை
அவ்வளவு ஏன்.. ஒரு வருடத்திற்கு முன்பாக கூட தனது தற்போதைய அரசியல் எதிரியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி யை பார்த்து அது காங்கிரஸின் குழந்தை என்று விமர்சனம் செய்திருந்தார் சந்திரபாபு நாயுடு. எனவே, காங்கிரஸ் கட்சியுடன் சந்திரபாபுநாயுடு அமைத்துள்ள கூட்டணி என்பது பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாகி உள்ளது. இதற்கு பதிலளித்த சந்திரபாபுநாயுடு, இந்தியாவையும் அதன் பெரிய அமைப்புகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பதால், அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கடந்த காலத்தை மறந்து விட்டு, இப்போது மற்றும் இனிவரும் காலங்களுக்கு தேவையான பேச்சுக்கள் மட்டுமே எங்களிடம் இருக்கிறது என்று தெரிவித்தார்.
கூட்டணி பிதாமகன்
சந்திரபாபு நாயுடு, கூட்டணிகளின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படுபவர். இவரது அரசியல் கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே இருந்து வந்துள்ளன. இவர் அமைக்கும், கூட்டணி வெற்றி கூட்டணியாக இருந்துள்ளது அல்லது வெற்றிக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது வாஜ்பாய் தலைமையில், பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 13 நாட்களிலேயே அந்த ஆட்சி கவிழ்ந்தது. சந்திரபாபு நாயுடு அந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம் சமாஜ்வாதி கட்சி, திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், மற்றும் தனது தெலுங்கு தேசம் கட்சி ஆகியவற்றை கூட்டணியில் இணைத்து காங்கிரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தார். இந்த கூட்டணி ஐக்கிய கூட்டணி என்று அழைக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி முறிந்தது.
வாஜ்பாய் அரசில் முக்கிய பங்கு
மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது வாஜ்பாய் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா இந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதன் காரணமாக 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் ஒரு தேர்தலை நாடு சந்திக்க இது காரணமாக அமைந்தது. அந்த, தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த கூட்டணியில் சந்திரபாபு நாயுடு அங்கம் வகித்தார். 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்தபோது அதில் சந்திரபாபு நாயுடுவின் கட்சி முக்கிய பங்காற்றியது வாஜ்பாய்க்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த நபராக அப்போது கருதப்பட்டவர் சந்திரபாபு நாயுடு தான்.
கூட்டணி கணிப்பு
2004ஆம் ஆண்டில் ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியிடம், தெலுங்கு தேசம் தோற்றது. இதன்பிறகு பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு அதை மதவாத கட்சி என்று விமர்சித்தார். ஆனால் சரியாக பத்து வருடங்களுக்கு பிறகு, 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது பாஜகவுடன், தெலுங்குதேசம் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது. மத்திய அரசின் ஆட்சி காலம் முடிவடைய போகும் சூழ்நிலையில் கூட்டணியை விட்டு சில மாதங்கள் முன்பாக வெளியேறிவிட்டது தெலுங்கு தேசம். இப்படியாக வெற்றிக்கூட்டணிகள் கண்ட, சந்திரபாபு நாயுடு இப்போது காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார்.