தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
டெல்லி: டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 26-ம் குடியரசு நாளில், டெல்லியில் நடைபெறும் அலங்கார அணி வகுப்பு ஊர்திகளில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.
மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வஉசி, விடுதலைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழக அரசின் அணிவகுப்பை, மத்திய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்துவிட்டது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாபு என்பவர் சார்பில், பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு ஆஜரான வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ் என்பவர், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனங்களை இடம்பெற உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார். இது தொடர்பாக முறையாக மனுத்தாக்கல் செய்யும்பட்சத்தில் வழக்கு திங்கட்கிழமை விசாரணை எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications