கொரோனா காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் - தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 5 மாநில தேர்தல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.
பஞ்சாப் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் தலைமை ஆணையர் சுசில் சந்திரா தேர்தல் ஆணையத்தின் தலைமையகமான நிர்வாசன் சதன் அலுவலகத்தில் வெளியிட்டார்.
5 மாநிலங்களில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் எனத் தெரிவித்த சுஷில் சந்திரா கொரோனா ஓமிக்ரான் பரவும் சூழ்நிலையில் சட்டசபை தேர்தலை நடத்துவது சவாலானது என்றும் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கூடுதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உடன் எந்த தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை
கொரோனா தொற்று பரவாது வகையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு கள ஆய்வின் அடிப்படையில் தேர்தல் நடத்தப் படுகிறது எனக் கூறிய அவர், ஒரு வாக்குச்சாவடியில் 1250 வாக்காளர்கள் வரை மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்களப் பணியாளர்கள்
மேலும் வாக்குப்பதிவு மையங்களில் சானிடைசர்கள், மாஸ்க்குகள் தயார் நிலையில் இருக்கும் எனவும், தேர்தல் அதிகாரிகள் பணியாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்த கொண்டவர்களாக இருப்பார்கள், தேர்தல் அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளனர் எனவும், இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷில் சந்திரா கூறினார்.

பேரணிகளுக்கு தடை
தேர்தலின்போது சாலை பேரணிகள் பாதயாத்திரைகள் போன்ற தேர்தல் பரப்புரை முறைகளுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும், ஜனவரி 15-ஆம் தேதி வரை நேரடியான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும, காணொலி காட்சி வாயிலாக தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது என்றார்.

கொண்டாட்டங்கள் கிடையாது
மேலும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றிக் கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் , வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர், கொரோனாவால் பாதித்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள், பொதுமக்கள் தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் சுஷில் சந்திரா கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications