'நீதிபதிகள் நியமனம் புனிதமானது.. ஊடகங்களில் பொறுப்பற்ற செயல் வருத்தமளிக்கிறது..' தலைமை நீதிபதி வேதனை
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க சிலரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், ஊடகங்களின் செயல் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்,
பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை கொலிஜியம் அமைப்பு தான் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும். இந்த அமைப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நான்கு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடம் பெற்றிருப்பார்கள்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக 9 பேரை நியமிப்பது குறித்து கொலிஜியம் அமைப்பு மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை பரிந்துரைத்துள்ளதாக இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

புனிதமானது கன்னியமிக்கது
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹாவின் பணி உபசார விழா இன்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, "நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறை புனிதமானது கண்ணியமிக்கது. ஊடகத்துறை நண்பர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாராட்டுகிறேன்
இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் திறமையான சில நீதிபதிகளின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. நான் மிகவும் வருத்தமடைகிறேன். இது எனக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இதில் முதிர்ச்சியுடனும் பொறுப்புடன் நடந்துகொண்டு, இது போன்ற ஊகங்களைத் தவிர்த்த பெரும்பாலான மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் பாராட்டுகிறேன்.

ஊடக சுதந்திரம்
நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தவொரு இறுதி முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. வரும் காலங்களில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு தேவையான முடிவுகள் எடுக்கப்படும். ஊடக சுதந்திரம் மற்றும் தனிநபர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் எண்ணம். ஆனால், இதன் கண்ணியத்தையும் ஒருமைப்பாட்டையும் அனைவரும் நிலைநாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

செய்திகள்
இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதில் கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக உள்ள பி.வி. நாகரத்னாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவருக்கு இன்னும் பல ஆண்டுகள் பணிக்காலம் இருப்பதால் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி வரும் 2027இல் ஆகும் வாய்ப்பு இவருக்கு உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications