வெளிப்படை தன்மையே இல்லை..தெளிவற்ற பிரதமர் மோடி அமைச்சரவை.. மீண்டும் சீண்டிய சு.சாமி.. ஏன் தெரியுமா?
டெல்லி: வெளிப்படை தன்மையின்றி தெளிவற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை உள்ளது. அதனை முதலில் மத்திய நிதி அமைச்சர் கிரண் ரிஜிஜூ சரிசெய்ய வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய நீதித்துறையில் கொலிஜியம் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது நீதிபதிகளை தேர்வு செய்யும் உச்சநீதிமன்றத்தின் குழுதான் கொலிஜியம் என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலிஜியத்தின் தலைவராக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இருப்பார். மூத்த நீதிபதிகளும் இடம்பெற்றிருப்பார்கள். இந்த குழு சார்பில் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைகள் வழங்கப்படும்.
இதெல்லாம் நீதித்துறை வேலை இல்ல.. அனைத்திலும் தலையிட்டால் அரசு எதற்கு? மத்திய சட்ட அமைச்சர் கேள்வி
கொலிஜியம் முறை என்ன?
அதாவது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக யாரை நியமனம் செய்வது?, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றுக்கான பரிந்துரைகளை வழங்கும். இந்த பரிந்துரைகளின் மத்திய சட்டத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பும். ஜனாதிபதி ஒப்புதலை தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.
சட்ட அமைச்சர் எதிர்ப்பு
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் முறைக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கிரண் ரிஜிஜூ பேசினார். அப்போது அவர் கொலிஜியம் முறையை விரும்பவில்லை எனக்கூறி விமர்சனம் செய்தார்.
கிரண் ரிஜிஜூ கூறியது என்ன?
இதுதொடர்பாக கிரண் ரிஜிஜூ பேசுகையில், ‛‛உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் முறையில் எனக்கு திருப்தி இல்லை. சிஸ்டம் சரியில்லை. பொதுமக்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் நினைப்பதை பற்றி தான் நான் பேசுகிறேன். தகுதியானவர்கள் தான் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய கொலிஜியம் முறையில் நீதிபதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை பரிந்துரை செய்கின்றனர். இது தவறானது'' என்பன உள்பட பல்வேறு கருத்துகளை கூறினார்.
கலவை கருத்து
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் இந்த பேச்சு பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. ஒரு தரப்பு அவரது கருத்தை வரவேற்றுள்ளனர். கொலிஜியம் முறையால் சில தகுதியானவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது மாற்றப்பட வேண்டும் என சிலர் கருத்துகள் கூறி மத்திய அமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தியாவில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் மாற்ற மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. நீதித்துறையிலும் விரைவில் மாற்றங்கள் ஏற்படலாம். இதற்கான முன்னோட்டமாக தான் கொலிஜியம் முறையை சட்டத்துறை அமைச்சர் விமர்சனம் செய்துள்ளதாக கூறி வருகின்றனர்.
சுப்பிரமணியசுவாமி விமர்சனம்
இந்நிலையில் தான் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் வெளிப்படைத்தன்மையின்றி உள்ளதுஎன்கிறார். முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் என்ற முறையிலும், நீதிமன்றங்களில் 100க்கும் அதிகமான வழக்குகளில் வாதிட்டவர் என்ற முறையிலும் நான் ஒன்றை கூறுகிறேன். மோடி அமைச்சரவை வெளிப்படை தன்மையின்றி மிகவும் தெளிவற்ற நிலையில் உள்ளது என்பதை என்னால் கூற முடியும். இதனை கிரண் ரிஜிஜூ முதலில் சரிசெய்ய வேண்டும். இதனை நீங்கள் செய்யும்போது பதவி நீக்கம் செய்யப்பட்டால் என்னை குறைக்கூறக்கூடாது'' என தெரிவித்துள்ளார்.