பிரதமர் பேச்சுக்கு எதிர்ப்பு... மக்களவையில் கடும் கூச்சல், குழப்பம்... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: நாடளுமன்ற மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தினர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வேளாண் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி அர்த்தமுள்ள எதையும் கூறத் தயாராக இல்லை என்று காங்கிரஸ் எம்பி ஆதீர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
இரண்டு தரப்பும் எதிர் திசையில் போறாங்க பாருங்க.. காங்கிரஸில் பிளவு இருக்கு.. லோக்சபாவில் மோடி அதிரடி
பிரதமர் பேச்சு
நாடளுமன்ற மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-வேளாண் சட்டங்கள் அமைக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் இப்போது தங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து விவசாயிகள் எதையும் இழக்கவில்லை. பண்ணை சட்டங்கள் அமைக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்களில் உள்ள காரணத்தை மூழ்கடித்து உண்மையை மறைக்க ஒரு சிலர் திட்டமிட்டு சதி செய்து வருகின்றனர் என்று கூறினார்.
கோஷங்கள் எழுப்பினார்கள்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். அப்போது அவையில் இருந்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கூச்சல் எழுப்பினர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் குறிதது பிரதமர் கூறிய அந்தோலன் ஜீவி வார்த்தையை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
வெளிநடப்பு செய்தனர்
பிரதமர் மோடியின் பேச்சுக்கு இடையூறு செய்யும் விதமாக அவர்கள் இவ்வாறு கூச்சலிட்டதால், சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை அமைதி காக்குமப்டி கேட்டுக் கொண்டார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கூச்சல் ஏற்படுத்தி கொண்டிருந்தார். ஆனாலும் தனது பேச்சை தொடர்ந்த பிரதமர் மோடி காங்கிரசை தாக்கினார். இதன் யடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மோடி அர்த்தமுள்ளதை கூறவில்லை
பின்னர் வெளியே வந்து காங்கிரஸ் எம்பி ஆதீர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:- வேளாண் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி சில உறுதியான நடவடிக்கைகளுடன் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அர்த்தமுள்ள எதையும் கூறத் தயாராக இல்லை. விவசாயிகளின் மரணம் குறித்த எங்கள் கவலைகளை பிரதமர் விவாதிக்கவில்லை . அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். வேளாண் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பதை பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். அனைவருக்கும் பயனளிக்காத சட்டங்களை ஏன் அரசு கொண்டு வர வேண்டும்? என்று கூறினார் .