காங். தேர்தல் டூ ராஜஸ்தான் குழப்பம்.. காரணமே அவர் தானாம்! திரைமறைவில் நடந்த முயற்சி.. பரபர தகவல்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. ராகுல் காந்தி கடந்த 20019இல் பதவி விலகிய பின்னர் சோனியா காந்தி தான் அங்கு இடைக்கால தலைவராக உள்ளார்.
உடல்நிலை காரணமாகச் சோனியா காந்தி தலைவர் பதவியை ஏற்க மறுத்து வருகிறார். இந்தச் சூழலில் காங்கிரஸில் இருந்து விலகிய பல தலைவர்களும் கட்சி விஷயங்களைக் கவனிக்கத் தலைவர் தேவை என்றே சொல்லி இருந்தனர்.
காங்கிரஸ் தலைவர் ரேஸ்.. சோனியா ஆதரவு யாருக்கு? 'குறுக்கே புகுந்த 2 தலைகள்’.. இன்று முடிவு தெரியும்!
நேரு குடும்பம்
இந்தச் சூழலில் தான் அக்.17ஆம் தேதி புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே மூத்த தலைவர்கள் பலரது கருத்தாக இருந்து வந்தது. இருப்பினும், ராகுல் காந்தி மட்டுமின்றி நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறப்பட்டது.
போட்டி
தற்போது வரை சசி தரூரும் திக்விஜய் சிங்கும் தேர்தலில் களமிறங்க உள்ளது உறுதியாகி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் என்ன தான் போட்டியிடவில்லை என்று நேரு குடும்பத்தினர் சொன்னாலும் கூட அவர்கள் இதில் இருந்து முற்றாகத் தள்ளி நின்றுவிடவில்லை. குறிப்பாகப் பிரியங்கா காந்தி உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி கடந்த 2019ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். உபி-இல் காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்த போதிலும், அமைப்பு ரீதியாகக் கட்சியை வளர்த்தார். இந்தச் சூழலில் காங்கிரஸ் தலைவர் பதவிக்குச் சரியான நபர் கிடைப்பதை உறுதி செய்ய அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உயர்மட்ட தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் குழப்பம்
முதலில் டெல்லி தலைமையின் சாய்ஸ் அசோக் கெலாட் தான். இருப்பினும், ராஜஸ்தான் குழப்பம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அங்குள்ள எம்எல்ஏக்கள் திடீரென போர்க்கொடி தூக்கியது காங்கிரஸ் கட்சிக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இன்றைய தினம் சோனியா காந்தியை சந்தித்த அசோக் கெலாட் ராஜஸ்தான் விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார்.
காரணம்
இந்த விவகாரத்தில் பிரியங்கா காந்தியின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு சச்சின் பைலட்டை கொண்டு வர வேண்டும் என்பதில் பிரியங்கா காந்தி ஆர்வம் காட்டியுள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் பைலட் கெலாட் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய போது, அவரை பிரியங்கா காந்தி தான் சமாதானம் செய்து இருந்தார். அடுத்தாண்டு ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், சச்சின் பைலட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி விரும்பி உள்ளார்.
பிரியங்கா காந்தி
இருப்பினும், அது தான் இந்த குழப்பத்திற்கு வழிவகுத்தது. இதுமட்டுமின்றி ராகுல் காந்தி முதலில் தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை என அறிவித்த உடன் பலரும் அடுத்து பிரியங்கா காந்தி தான் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பினர். அந்தச் சமயத்தில் ராகுல் காந்தி வெளிப்படையாகவே தனது சகோதரியை இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்றும் நேரு குடும்பத்தில் இருந்து தான் தலைவர் வர வேண்டும் என இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
மோசமான நிலை
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே மோசமான நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட பெரும்பாலான சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸால் பெரிய வெற்றியை முடியவில்லை. இந்தச் சூழலில் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைமைக்கு வந்தால் அது கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்றே பலரும் கருதுகின்றனர். ஏனென்றால் சீதாராம் கேஸ்ரி போன்ற நேரு குடும்பத்தைச் சேராதவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததில்லை.