காங்கிரஸ் தலைவர் பதவி.. அசோக் கெலாட்டுக்கு சோனியா காந்தி ஆதரவு ஏன்? பின்னணியில் 5 முக்கிய காரணம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் ராகுல்காந்தி போட்டியிட விரும்பவில்லை என கூறப்படும் நிலையில் சோனியா காந்தியின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து சசிதரூர் எம்பியும் போட்டியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் அசோக் கெலாட்டுக்கு சோனியா காந்தியின் ஆதரவு ஏன் உள்ளது? என்பதன் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன.
2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் ராகுல்காந்தி தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்டிக்கர் டூ போட்டோஷூட்! மோடி திறந்துவிட்ட “சிறுத்தைகள்”.. அவருக்கு எதிராகவே திருப்பிவிட்ட காங்கிரஸ்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் ராஜஸ்தான் முதல் அமைச்சரான அசோக் கெலாட்டை நியமிக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். ஜி23 தலைவர்களில் ஒருவராக உள்ள எம்பி சசீதரூரும் தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக சில நாட்களாக முன்பு சோனியா காந்தி, சசிதரூரை கடந்த செப்டம்பர் 19ம் தேதி அழைத்து பேசினார். அதேபோல் நேற்று அசோக் கெலாட், சோனியா காந்தியை சந்தித்தார். இந்நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட்-சசிதரூர் இடையே போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது.
மனுத்தாக்கல் துவக்கம்
இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 24ல் துவங்கி செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளது. அக்டோபர் 1ம் தேதின மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். ஒருவருக்கு மேல் இப்பதவிக்கு போட்டியிட்டால் அக்டோபர் 17ல் தேர்தல் நடக்கும். இந்த தேர்தல் நடந்தால் 137 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடக்கும் ஐந்தாவது தேர்தலாகும். இந்நிலையில் தான் அசோக் கெலாட்-சசிதரூர் இடையே நடக்கம் போட்டியில் அசோக் கெலாட் முன்னிலை பெற்று வெற்றி பெறலாம் என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
முதல் காரணம்
அசோக் கெலாட் நேரு-சோனியா காந்தி குடும்பத்தின் விசுவாசி. இவர் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ராகுல்காந்தி, சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது டெல்லியில் முன்நின்று போராட்டத்தை தொடர்ந்து அசோக் கெலாட் நடத்தினார். பலமுறை கைது செய்யப்பட்டார். மேலும் சோனியா காந்தி, ராகுல்காந்தியை பாதுகாக்கும் வகையில் பல முறை பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி விளக்கம் அளித்தார். மேலும் அவர் ராஜஸ்தான் முதல்வராக இருப்பதோடு, விரைவில் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தின் மேற்பார்வையாளராகவும் உள்ளார். ஆனால் மறுபுறம் சசிதரூர், அசோக் கெலாட் போல் நேரு, சோனியாகாந்தியின் குடும்பத்துக்கு அவ்வளவு நெருக்கமாக இருப்பது இல்லை. அதோடு ஜி23 தலைவர்களிடம் ஒருவராக அறியப்பட்டு வரகிறார். 2020ல் உள்கட்சி சீர்திருத்தங்கள், உயர்மட்ட கூட்டத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என சோனியா காந்திக்க கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சசிதரூரை காட்டிலும் அசோக் கெலாட் தான் சோனியா காந்தியின் குடும்பத்துடன் விசுவாசமாக உள்ளது தெரிகிறது.
2வது காரணம்
அசோக் கெலாட் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கும், காங்கிரசுக்கும இடையேயான பந்தம் மிகவும் நீண்டகாலமாக உள்ளது. இவர் 5 முறை எம்பியாகவும், 5 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். ராஜஸ்தான் முதல்வராகவும் உள்ளார். ஆனால் சசிதரூர் 2009ல் இருந்து தான் காங்கிரஸ் கட்சியின் செயல்பட்டு வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று முறை எம்பியாக தேர்வாகி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தொழில் வல்லுநர் பிரிவின் தலைவராக தற்போது நீடித்து வருகிறார்.
3வது காரணம்
அசோக் கெலாட் கெலாட் அரசியல் அனுபம் அதிகம் கொண்டவர். இவர் 3 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பிவி நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். 3 முதல்வராக உள்ளார். அதேவேளையில் சசிதரூர் 2 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இரண்டு முறையும் அவர் குறுகிய காலம் மட்டுமே அமைச்சராக இருந்தார். 2009 மே 23ம் தேதி முதல் 2010 ஏப்ரல் 18 வரை முதல் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், அதன்பிறகு 2012 அக்டோபர் 28 முதல் 2014 மே மாதம் வரை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் 1978-2007 வரை 29 ஆண்டுகள் துணை பொதுச் செயலாளர் உட்பட பல பதவிகளிலும் இருந்துள்ளார். 23 புத்தகங்களை எழுதியுள்ளார். 2006ல் கோபி அன்னானுக்கு பிறகு ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார். அதன்பிறகு விலகினார். இவருக்கு காங்கிரஸ், அரசியல் சார்ந்த பதவிகளை விட பிற விஷயங்களில் தான் அனுபவம் உள்ளது. இதுவும் சசிதரூருக்கு பிரச்சனையாக உள்ளது.
4வது காரணம்
மேலும் ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட்டுக்கு நல்ல அரசியல் அனுபவம் உள்ளது. இதனை இந்தியா முழுவதும் பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. மேலும் இவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுப்பதன் மூலம் ராஜஸ்தானின் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்கலாம். இதன்மூலம் ராஜஸ்தானில் அடுத்தக்கட்ட தலைவரை உருவாக்கி அங்கு ஆட்சியை தக்க வைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.
5வது காரணம்
மேலும் அசோக் கெலாட் சர்ச்சகைளில் சிக்காத அனுபவம் நிறைந்த அரசியல்வாதி. இந்தியாவின் அரசியல் நிலைப்பாடு, மக்களின் எண்ணம் என்பது பற்றி அவர் நன்கு அறிந்தவர். ஆனால் சசிதரூர் அப்படி இல்லை. அதோடு அவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். ஐபிஎல் கிரிக்கெட் விஷயத்தில் பங்கு வாங்க பதவியை தவறான பயன்டுத்தியதாக கூறி சர்ச்சையில் சிக்கி மத்திய அமைச்சர் பதவியை இழந்தார். அதன்பிறகு மனைவி சுனந்தா இறப்பு தொடர்பான விஷயத்தில் சர்ச்சையில் சிக்கினார். அதோடு ட்விட்டரை அதிகமான பயன்படுத்தும் அவர் அதிலும் கருத்துகள் தெரிவித்து சர்ச்சைகளை தன்னுடனே வைத்து கொள்வதே வாடிக்கையாக வைத்துள்ளார். 2021ல் 6 பெண் எம்பிக்களுடன் அவர் சேர்ந்து இருக்கும் படத்தை பதிவிட்டு கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதனால் தான் சசிதரூரை விட அசோக் கெலாட்டை தலைவராக்க சோனியா காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.