மாட்டிகிச்சு.. இத விட்றாதீங்க! காங்கிரசின் ஸ்கெட்ச் - கையை பிசையும் பாஜக.. எதிராக திரும்பிய கத்தி
டெல்லி: உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பிருப்பது அம்பலமான நிலையில், அதன் தொடர்ச்சியாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி பாஜகவின் ஐடி விங் பொறுப்பில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கையில் எடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, இதனை வைத்து மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவரை துக்சா கிராம மக்கள் பிடித்து நேற்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.
ஷாக் ஆன அதிகாரிகள்.. மோடியின் ஹெலிகாப்டரை மொய்த்த 'கருப்பு பலூன்கள்’ - ஆந்திராவிலுமா?
பாஜகவில் பயங்கரவாதி
கைது செய்யப்பட்ட பைசல் அஹமது மற்றும் தலிப் ஹுசைன் ஆகிய இருவரில் தலிப் ஹுசைன் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி என்பது தெரிய வந்திருக்கிறது. ரஜோரி பகுதியை சேர்ந்த தலிப் ஹுசைன், பாஜகவில் இணைந்து மூத்த தலைவர்கள் பலருடன் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு ஊடக அணி பொறுப்பாளராக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆன்லைன் ஆள் சேர்க்கை
இதுகுறித்து அப்பகுதி பாஜக பிரமுகர்கள் கூறுகையில், ஆன்லைன் வாயிலாக பலர் கட்சி இணைவதால் அவர்களின் முழு பின்னணி தங்களுக்கு தெரியாமல் போவதாக கூறியுள்ளனர். ஆன்லைனில் இணைபவர்களின் பின்னணி குறித்து ஆராய்வதில்லை என்பதை அக்கட்சி நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர். இந்த தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உதய்பூர் கொலை
இதேபோல்தான் ராஜஸ்தானிலும் நேற்று ஒரு தகவல் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக கூறி ராஜஸ்தானின் உதய்பூரில் கண்ணையா லால் என்ற தையல் கலைஞர் 2 பேரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பாஜக தொடர்பு
இந்தியாவையே அதிர வைத்த அந்த கொடூர செயலை செய்த இருவரும் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி கையில் கத்தியுடன் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு மிரட்டும் தொனியில் பேசினர். அவர்கள் இருவரையும் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே இருவரில் ரியாஸ் அட்டாரிக் என்ற நபர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகிய புகைப்படங்கள் நேற்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
பாஜக பிரமுகர்களுடன் நெருக்கம்
சம்பந்தப்பட்ட நபர் பாஜகவின் சிறுபான்மை அணியில் சேர விரும்பியதை அக்கட்சியின் நிர்வாகியே தனியார் ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்த வீடியோவும் நேற்று வெளியானது. கொலையாளி ரியாஸ் அட்டாரிக்கு பாஜக தலைவர் ஒருவர் கழுத்தில் பாஜக கட்சித்துண்டு அணிவித்த புகைப்படங்களும் வெளியாகின சர்ச்சையை ஏற்படுத்தின. பலரும் இவற்றை பகிர்ந்து பாஜகவை விமர்சித்து வந்தனர்.
ஜெய்ராம் ரமேஷ்
இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பாஜக ரியாஸ் அட்டாரி பாஜகவை சேர்ந்தவர் இல்லை என மறுத்தது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், உதய்பூர் கொலையாளி ரியாஸ் அட்டாரிக்கு பாஜக பிரமுகர் துண்டு மாட்டிவிடும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, "பாஜகவுடைய தேச பக்தியின் உண்மை இந்த புகைப்படத்தில் தெரிகிறது. பாஜக பயங்கரவாதிகளுடன் கூட்டணி வைத்திருப்பது அனைவரது முன்பும் வந்துள்ளது." என்று கூறினார்.
காங்கிரஸ் போராட்டம்
இந்த நிலையில் பயங்கரவாதி பாஜக கட்சியில் உறுப்பினராக இருந்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் ஹுசைன் ஆகியோரது புகைப்படங்களை பதாகைகளாக ஏந்தி நின்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரவிந்தர் ஷர்மா கூறுகையில் "பாஜக தலைவர்களுக்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹுசைனுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும்." என்றார்.
அமித்ஷாவுடன் பயங்கரவாதி
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ராமன் பல்லா கூறுகையில், "பாஜகவுக்கும் ஹுசைனுக்கும் இடையிலான தொடர்பையும், அதன் மூலம் அவர் செய்த காரியங்களையும் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும். கட்சியில் பயங்கரவாதிகள் இருந்தது குறித்து பாஜக விளக்கவேண்டும். பயங்கரவாதி ஹுசைன் அமித்ஷாவுடன் நிற்கும் புகைப்படமும் உள்ளது. உள்துறை அமைச்சர் ஏன் அமைதியாக இருக்கிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எடுக்கும் கத்தி
பயங்கரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் நாட்டை ஆளும் பாஜகவில் பொறுப்புகளில் இருந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதாகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கப்போவதாகவும் கூறி தேர்தலில் பிரச்சாரம் செய்து வந்த பாஜகவிலேயே பயங்கரவாதிகள் அங்கம் வைத்திருப்பதை தேசிய அளவில் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக்க காங்கிரஸ் தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாம்.