ஒருங்கிணைப்பாளர் பதவி.. ராகுலை கைகாட்டிய நிதிஷ்குமார்! அடுத்து நடந்த ட்விஸ்ட்.. ராகுல் சொன்ன பதில்
டெல்லி: இந்தியா கூட்டணி கட்சிகளின் 5வது ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா கூட்டணியின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வு நடைபெற்றது.
மக்களை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் இந்தியா கூட்டணி இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை. மட்டுமல்லாது பிரதமர் வேட்பாளர் குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த தேர்தல் காங்கிரசுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஏராளமான இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலங்கள் தற்போது கை நழுவி இருக்கிறது. மூத்த தலைவர்கள் சிலர் வெளியேறி உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸையும், ஆம் ஆத்மியையும் பாஜகவின் 'பி' டீம் என்று சொல்லி வந்த காங்கிரஸ், தற்போது அந்த கட்சிகளையும் இணைந்து இந்தியா கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. காரணம் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விதான். 421 தொகுதிகளில் களம் கண்ட காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இந்த முறை எப்படியாவது பாஜகவை தோற்கடிப்பது என தீவிர முயற்சியில் கட்சி இறங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணி.
மட்டுமல்லாது, இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிதான் பதவியேற்பார். இதன் மூலம் நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக பிரதமராக பதவியேற்றவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். அதேபோல 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் 100வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டும். பதிலுக்கு காங்கிரஸ் இன்னும் பலவீனமடையும்.
இதையெல்லாம் காங்கிரஸ் விரும்பவில்லை, எனவே இந்தியா கூட்டணியில் அது உறுதியாக இருக்கிறது. ஆனால் இந்த கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீட்டில் பயங்கர சிக்கல்கள் மேலெழுந்திருக்கின்றன. மேற்கு வங்கத்தில் வெறும் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவேன் என மமதா கூறியிருந்தது காங்கிரஸின் பொறுமையை சோதித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரசும், சிவசேனாவும் முரண்பட்டிருக்கிறது. கேரளாவில் சிபிஎம் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது, உத்தரப் பிரதேசத்திலும் அகிலேஷ் யாதவ் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குவதை அவ்வளவாக விரும்பவில்லை.
இத்தனை பஞ்சாயத்துகளுக்கு மத்தியில்தான் நேற்று இந்தியா கூட்டணி தலைவர்களின் 5ம் கட்ட கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இந்தியா கூட்டணியின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் குறித்து தேர்வும் நடைபெற்றது. கூட்டணியின் தலைவராக மல்லிகர்ஜுன கார்கேவின் பெயர் சோனியா காந்தியால் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் பெயரை சிபிஎம் சார்பில் சீதாராம் யெச்சூரி பரிந்துரைத்தார்.
ஆனால், நிதிஷ் குமார் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு மாறாக, ராகுல் காந்தியை அவர் கைகாட்டினார். இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரை பயணம் இருப்பதால் ராகுல் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து லாலு யாதவ்தான் ஒருங்கிணைப்பாளராக வர வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார். இப்படியாக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆட்களை நியமிப்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications