கொரோனா 2வது அலை ஜூனில் முடிவுக்கு வரும்.. 3வது அலை எப்போது? மத்திய நிபுணர் குழு அறிவிப்பு
டெல்லி: கொரோனா 2வது அலை ஜூன் மாதம் குறையும் என்றும், 3வது அலை அடுத்த 6-8 மாதத்திற்குப் பின் தாக்கக் கூடும் என்றும் மத்திய நிபுணர் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வரும் 29-31ம் தேதிகளில் உச்சத்தை தொடும் என்றும் மத்திய நிபுணர் குழு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு தற்போது வேகமாக குறைந்து வருகிறது. 4லட்சத்தில் இருந்து 2 லட்சம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
12 வயதுதான்.. சென்னையில் சிறுமியை தாக்கிய கரும்பூஞ்சை.. மருத்துவமனையில் அனுமதி.. எப்படி ஏற்பட்டது?
கடந்த ஒன்றரை ஆண்டில் அதிகமான கொரோனா பலியை இந்த மே மாதம் சந்தித்துள்ளது. இம்மாதத்தின் முதல் 19 நாளில் கிட்டத்தட்ட 75,000 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதற்கு முன் கடந்த ஏப்ரலில் 49,000 பேர் இறந்ததே அதிகபட்ச உயிரிழப்பு ஆகும். ஆனால் இம்மாதத்தில் இன்னும் 10 நாட்கள் மீதமிருப்பதால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று அச்சம் எழுந்துள்து.
எவ்வளவு பாதிப்பு
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் வைரஸ் தொற்று குறையத் தொடங்கிவிட்டது. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தினசரி பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 35ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 400 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா 2வது அலை
கொரோனா 2வது அலை முதல் அலையைவிட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2வது அலை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து மத்திய அறிவியல் அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் நிபுணர் குழு கணித முறைப்படியிலான கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஜூலையில் முடிந்துவிடும்
நிபுணர்களின் இந்த கணிப்பின் படி , மே மாத (இம்மாதம்) இறுதியில் நாடு முழுவதும் தினசரி தொற்று பாதிப்பு 1.5 லட்சமாக குறையும். ஜூன் மாதத்தில் தினசரி பாதிப்பு 15,000- 20,000க்கு கீழ் சரிந்து விடும்.ஜூலை தொடக்கத்தில் கொரோனா 2வது அலை முழுவதும் முடிந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழு தகவல்
மத்திய நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள ஐஐடி கான்பூர் பேராசிரியர் மணிந்திர அகர்வால் பேசுகையில், ''மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மபி, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்தரகாண்ட், குஜராத், அரியான, டெல்லி, கோவா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே கொரோனா 2ம் அலையின் உச்சத்தை சந்தித்து விட்டன. இனி தமிழ்நாட்டில் வரும் 29-31ம் தேதி கொரோனா உச்சத்தை தொடும். மேகாலயாவில் வரும் 30ம் தேதியும், திரிபுராவில் வரும் 26-27ம் தேதியிலும் பாதிப்பு உச்சத்தை தொடும்,
நோய் எதிர்ப்பு சக்தி
அடுத்த 6-8 மாதத்திற்குப் பிறகு 3வது அலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வரும் அக்டோபர் வரை 3வது அலை ஏற்பட வாய்ப்பில்லை. எனவே அதற்குள் நிறைய பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். ஏற்கனவே பலர் தொற்றிலிருந்து குணமடைந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பர். அதே போல தடுப்பூசியின் வேகத்தையும் அதிகரித்தால் 3வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தவிர்க்க முடியும்" என்றார்.
மோசமான பாதிப்பு
கொரோனா 2வது அலை இவ்வளவு தீவிரமடையும் என்பதை நிபுணர் குழு கணிக்க தவறிவிட்டதை ஒப்புக் கொண்டுள்ளது. குழுவில் உள்ள ஐஐடி ஐதராபாத் பேராசிரியர் வித்யாசாகர் கூறுகையில், ''கொரோனா 2வது அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சம் 1.5 லட்சமாக இருக்கும் என கணித்திருந்தோம். ஆனால் அது தவறாகி விட்டது. 2வது அலை இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கத் தவறியதை ஒப்புக் கொள்கிறோம்'' என்றார்.