இத்தாலி, அமெரிக்காவில் கொரோனா பரவ இதுதான் காரணம்.. நாம் அதே தவறை செய்ய கூடாது.. மோடி தந்த வார்னிங்!
இத்தாலி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனா பரவ காரணம் என்ன என்று பிரதமர் மோடி இன்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
டெல்லி: இத்தாலி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனா பரவ காரணம் என்ன என்று பிரதமர் மோடி இன்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
கடைசியில் இந்தியா அந்த முக்கியமான முடிவை எடுத்துவிட்டது. கொரோனாவிற்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவில் இருந்து 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கொரோனவை எதிர்கொள்ளும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா சங்கிலி தொடர்
இன்று மக்கள் முன்னிலையில் தோன்றிய பிரதமர் மோடி தனது பேச்சில், நாம் எல்லோரும் சேர்த்து செயல்பட வேண்டிய நேரம் இதுதான். நாம் எல்லோரும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்வோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் அதற்கும் மேல் நாம் எல்லோரும் இந்த போராட்டத்தை எதிர்கொள்வது மட்டுமின்றி அதில் வெற்றியும் பெற வேண்டும். நாம் நம்மையும், நம்முடைய உறவினர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதுதான் சரியான நேரம்
தீயைவிட படுவேகமாக பரவக் கூடியது கொரோனா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை உடைத்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது. முழுமையான பொறுப்போடு ஒரு நாள் ஊரடங்கை ஒவ்வொரு இந்தியனும் கடைபிடிக்க வேண்டும். கொரோனா குறித்த வதந்திகள் மூட நம்பிக்கைகளை நம்பாதீர்கள்.
மக்களின் எதிர்க்காலம் முக்கியம்
நாம் இப்போது செய்யும் விஷயங்கள்தான் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும். இத்தாலியும் அமெரிக்காவும் நல்ல சுகாதாரத்துறை நிர்வாகம் கொண்ட நாடுகள். மிக சிறப்பான சுகாதாரத்துறை அந்த நாடுகளிடம் உள்ளது. ஆனால் அங்கும் கூட கொரோனா பரவியது. அவர்களால் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கெல்லாம் மிக கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு மக்கள் வீட்டிற்கு உள்ளே இல்லாததுதான் காரணம்.
காரணம் இதுதான்
அரசின் முடிவை மக்கள் அங்கு மதிக்காமல் வெளியே சுற்றினார்கள். மக்கள் போதிய விழிப்புணர்வுடன் , ஒழுக்கத்துடன் செயல்படவில்லை. இதுதான் அங்கு கொரோனா வேகமாக பரவ காரணம். அதே தவறை நாம் செய்ய கூடாது. இத்தாலி, அமெரிக்கா போல நாம் இருக்க கூடாது. நாம் இந்த ஊரடங்கை மதித்து வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும். நாம் யாரும் வீட்டிற்கு வெளியே செல்ல கூடாது, என்று பிரதமர் மோடி தனது பேச்சில் கண்டிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.