கொரோனா தடுப்பூசி ஒத்திகை : நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் நடைபெற்றது
தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 116 மாவட்டங்களில் 259 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்றது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 116 மாவட்டங்களில் 259 மையங்களில் இன்று ட்ரை ரன் எனப்படும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Recommended Video
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா 2020 ஆண்டில் உலக மக்களை தன் பிடியில் வைத்திருந்தது. கடந்த ஆண்டினை கொரோனா ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு உலகம் முழுவதும் 8,43,48,064 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 5,96,17,012 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,0303,409 பேராக உயர்ந்துள்ளது. 99,01,929 பேர் குணமடைந்துள்ளனர். 252,275பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் உருமாறிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,18,935 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 7,98,420 பேர் மீண்டுள்ளனர். தற்போது 8,380 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க நடைபெற்ற ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் இதுவரை எந்த தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதற்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஒத்திகையின் நோக்கம் யாருக்கும் தடுப்பூசி கொடுப்பதில்லை. தடுப்பூசி வரும்போது, இந்த செயல்முறை சரியாக வேலை செய்யுமா இல்லையா, என்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்வதே இதன் நோக்கம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் ஒத்திகை
130 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசி ஒத்திகை என்பது கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வைத்தலே ஆகும். அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கொண்டு சேர்ப்பது. தடுப்பூசி மருந்துகளை எப்படி பராமரிப்பது. தடுப்பூசி போடப்பட்டவர்களை கண்காணிப்பது போன்றவை இந்த ஒத்திகையில் நடைபெற்றது.
தடுப்பூசி ஒத்திகை எப்படி நடைபெறும்
இதில் தடுப்பூசி விநியோகத்தை ஆன்லைன் வாயிலாக கண்காணித்தல், பரிசோதனை ரசீது மற்றும் ஒதுக்கீடு, பணியாளர்களை தயார்படுத்துதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தன்னார்வலர்களுக்கு அறிவுரைகளை வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும். மேலும் தடுப்பூசி குளிர்விப்பு கலன்களை பரிசோதித்தல், போக்குவரத்து வசதிகள், கூட்டத்தை மேலாண் செய்தல், போதிய சரீர இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
நாடு முழுவதும் இன்று தடுப்பூசி ஒத்திகை
இதற்கான அனைத்து வசதிகளையும் தயார் செய்யும் நடவடிக்கைகளில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுவர். அப்போது குறைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனே அவற்றை களைய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த டிசம்பர் 28, 29ஆம் தேதிகளில் பஞ்சாப், அசாம், ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற நிலையில் நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
தமிழகம் தயார் நிலை
தமிழகத்தில் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெற்றது.
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் நெல்லக்கோட்டை ஆரம்ப சுகாதார மையம், நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவமனை, சமாதானபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார மையத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
எங்கெங்கு ஒத்திகை நடைபெறும்
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நெமம் ஆரம்ப சுகாதார மையம், திருமழிசை ஆரம்ப சுகாதார மையம், கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் நிறுவனம், சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்.எல்.எம். ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், பூலுவாப்பட்டி ஆரம்ப சுகாதார மையம் என 17 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
தடுப்பூசி ஒத்திகை வழிகாட்டுதல்கள்
இதற்கான விரிவான வழிகாட்டுதல்கலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒத்திகை நிகழ்வானது வெவ்வேறு மையங்களில் 5 செஷன்களாக தலா 25 தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தி பார்க்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்படும். அவற்றில் 5 வெவ்வேறு மையங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மாவட்ட மருத்துவமனை, CHC/PHC, நகர்ப்புற மையங்கள், தனியார் சுகாதாரத்துறை மையங்கள், கிராமப்புற பகுதிகள் உள்ளிட்டவை அடங்கும்.