கொரோனாவுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள விராஃபின் எனும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது. மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க விராஃபின் மருந்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராஃபின் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு சுவாச மண்டல பாதிப்பை குறைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வெளிப்புறத்தில் இருந்து ஆக்சிஜன் வழங்கும் தேவையை விராஃபின் குறைக்கும் என்றும் மருத்துவ துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பல லட்சம் பேரை பாதித்துள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். நாடே அவசரகால நிலையை எதிர்நோக்கியுள்ளது. சுடுகாடுகளில் எரிக்கவும், புதைக்கவும் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரெம்டெசிவர் மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட மிதமான கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஸைடஸ் நிறுவனத்தின் விராஃபின் மருந்திற்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் வழங்கியுள்ளது.
ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் விராஃபின் பெகிலேட்டட் இன்டர்ஃபெரான் ஆல்பா -2 பி, மருந்துகளை மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆக்சிஜன்'.. இந்தியாவுக்கோ அது 'வேதனை'.. அமெரிக்காவுக்கோ அது 'சாதனை'
விராஃபின் மருந்துடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 91.15 சதவிகிதம் பேர் 7 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. இந்த சிகிச்சையானது நோயாளிகளுக்கு துணை ஆக்ஸிஜனின் தேவையை குறைக்கிறது.
Recommended Video
நாடு முழுவதும் 20-25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது, விராஃபின் எடுத்து கொண்ட நோயாளிகளுக்கு குறைவான துணை ஆக்ஸிஜன் தேவை என்பதைக் காட்டியது. கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிப்பதில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்த சுவாசக் கோளாறு பிரச்சினையை இந்த விராஃபின் கட்டுப்படுத்த முடியும் என்பதை சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன.