இடதுசாரி கட்சிகள் இணைய வேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்பட்டுள்ளது; சுதாகர் ரெட்டி
டெல்லி: அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஒரே கட்சியாக இணைய வேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத பெருந்தோல்வியை இடதுசாரிகள் எதிர்கொண்டுள்ளனர். மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த இடதுசாரிகள், ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை.
இடதுசாரி வாக்காளர்கள் தங்களை அப்படியே பாஜகவினராக உருமாற்றிக் கொண்ட அவலம் அங்கு நடந்தது. கேரளாவிலும் இடதுசாரிகள் தலையெடுக்க முடியவில்லை. திமுகவின் உதவியால் தமிழகத்தில் மட்டும் 4 தொகுதிகளில் இடதுசாரிகள் வென்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 5 எம்.பிக்கள்தான் இடதுசாரிகளுக்குக் கிடைத்துள்ளது.
இதையடுத்து இடதுசாரிகள் செய்ய வேண்டியது என்ன என்கிற விவாதங்கள் தலைதூக்கியுள்ளன. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், 60 ஆண்டுகால வரலாற்றில் மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறோம்.
4 இடதுசாரி கட்சிகளும் இணைவது குறித்து சிந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் இழந்த நம்பிக்கையை மக்களிடம் நாம் பெற முடியும். இந்த இணைப்பு அவசியமானதும் அவசரமானதும் கூட என கூறியுள்ளார்.