‛‛பழிக்குப்பழி’’.. அமித்ஷாவின் உள்துறையில் ‛கிரிக்கெட்’ மட்டுமே உள்ளது! சு.சாமிக்கு வந்ததே கோபம்
டெல்லி: ‛‛காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பண்டித்கள் கொல்லப்படும் நிலையில் பழிக்குப்பழி வாங்காமல் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத சூழலில் கிரிக்கெட் தான் அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகமாக உள்ளது'' என சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டித்கள் வசித்து வந்தனர். தொடர்ந்து அங்கு பயங்கரவாதம் அதிகரித்த நிலையில் காஷ்மீர் பண்டித்கள் அங்கிருந்து பிற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
அதன்பிறகு காஷ்மீர் பண்டித்களின் பாதுகாப்பை உறுதி செய்து மத்திய அரசு அவர்களை காஷ்மீரில் குடியேற வைத்தது. தற்போது அங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.
ஹிந்தியில் மருத்துவ படிப்பு.. மத்திய பிரதேசத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா
காஷ்மீர் பண்டித் பிரச்சனை
கடந்த சில மாதங்களாக காஷ்மீர் பண்டித்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். அடிக்கடி காஷ்மீர் பண்டித்களை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் காஷ்மீர் பண்டித்கள் கொலை செய்யப்படுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் பல காஷ்மீர் பண்டித்கள் மீண்டும் காஷ்மீரில் இருந்து பாதுகாப்பு கருதி வெளியேற துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தொடரும் சோகம்
இந்நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சவுத்ரி குண்ட் பகுதியை சேர்ந்த கிருஷ்ண பட் என்ற காஷ்மீரி பண்டித்தை நேற்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது அங்குள்ள மக்களிடம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளது. அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தற்போது சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுப்பிரமணியசாமி விமர்சனம்
ஏற்கனவே காஷ்மீர் பண்டித்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல் பதர் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனால் கிருஷ்ண பட்டையும் அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கொலை செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் பயங்கரவாதியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் காஷ்மீரில் காஷ்மீரி பண்டித் மீதான தாக்குதலுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பழிக்குப்பழி அவசியம்
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன்சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காஷ்மீரி பண்டித் பிகே பட் கோழைத்தனமாகவும், கொடூரமாகவும் தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அமித்ஷாவின் காஷ்மீர் பயணம் என்பது வெற்றுத்தனமானது என்பதையே இந்த கொலை காட்டுகிறது. பழிவாங்காமல் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது'' என கூறியுள்ளார். அதாவது சமீபத்தில் அமித்ஷா 3 ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயங்கரவாத அச்சுறுத்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதனை தான் தற்போது சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்துள்ளார்.
கிரிக்கெட் மட்டுமே...
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் தனது துறை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாத நிலையில் உள்ளதை குறிப்பிடும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி சில பதிவுகளை ட்விட்டரில் செய்துள்ளார். அதில், ‛‛மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எம்பிபிஎஸ் படிப்பை இந்தி மொழியில் கற்கலாம் என்பதை உறுதி செய்வதில் மும்முரமாக உள்ளார்'' எனவும், ‛‛அமித்ஷாவின் உள்துறை அமைச்சகம் என்பது கிரிக்கெட் தான்'' எனக்கூறி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார். அதாவது காஷ்மீரில் காஷ்மீரி பண்டித்கள் கொல்லப்படும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பை அமல்படுத்துவதாகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள அமித்ஷாவின் மகன் பிசிசிஐ செயலாளராக தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தான் மறைமுகமாக சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.