"முதலைகள் அப்பாவிகள்.. நமக்கு தேவை தடுப்பூசிகள், கண்ணீர் இல்லை.." பிரதமரின் கண்ணீர்.. ராகுல் தாக்கு
டெல்லி: பிரதமர் மோடி சுகாதார ஊழியர்களுடான கலந்துரையாடலில் தழுதழுத்து அழுததை எதிர்க்கட்சியினர் முதலை கண்ணீர் என விமர்சித்து வரும் நிலையில், ராகுல் காந்தி தனது டவிட்டரில் முதலைகள் அப்பாவிகள் என ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பரவும் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாகவே உள்ளது.
தினசரி உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் என சுகாதாரத் துறையினர் பலரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
ராகுல் விமர்சனம்
ராகுல் காந்தி கொரோனாவை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. அவர் தனது ட்விட்டரில், "தடுப்பூசிகள் இல்லை. வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஜிபிடி, உச்சத்தில் கொரோனா உயிரிழப்புகள். இதற்கெல்லாம் மத்திய அரசின் பதில் என்னவாக இருக்கும்? எனப் பார்த்தால் பிரதமர் அழுகிறார்" எனக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
முதலைகள் அப்பாவிகள்
கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி சுகாதார பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கொரோனாவால் பல சுகாதார ஊழியர்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பேசும்போதே கண்ணீர்விட்டுத் தழுதழுத்து அழுதார். ஆனால், பிரதமர் நடிப்பதாகவும் இதை முதலை கண்ணீர் என்றும் காங்கிரஸ் கட்சியில் பலர் விமர்சித்தனர். இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டரில் "முதலைகள் அப்பாவிகள்" என ஒருபடி மேலே சென்று தாக்கியுள்ளார்.
இந்திய பொருளாதாரம்
இது மட்டுமின்றி மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு வெளியிட்ட உலக பொருளாதார நிலை குறித்த பட்டியலையும் ராகுல் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 8 சதவீதமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் வங்கதேசத்தின் ஜிடிபி 3 சதவீதமாகவும், சீனாவின் ஜிபிபி 1.9 சதவீதமாகவும், பாகிஸ்தான் ஜிடிபி 0.4 சதவீதமாகவும் உள்ளது.
இரண்டு பொருந்தொற்றுகள்
இது குறித்து ராகுல் காந்தி, "மோடி அரசின் தவறான நிர்வாகத்தால், நாம் இப்போது கொரோனாவுடன் சேர்த்து கருப்பு பூஞ்சை பெருந்தொற்றையும் எதிர்கொள்கிறோம். ஏற்கனவே கொரோனா வைரசுக்கான மருந்துகளுக்குப் பற்றாக்குறை உள்ள நிலையில், இந்த கருப்பு பூஞ்சை நோய் மருந்துகளுக்கும் இந்தியாவில் மிகப் பெரிய பற்றாக்குறையாக உள்ளது. இதைச் சமாளிக்கப் பிரதமர் மோடி விரைவில் தட்டுகளைக் கொண்டு ஒலி எழுப்பக் கூறுவார்" என மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
|
தடுப்பூசி பணிகள்
அதேபோல மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், "ஜூலை மாதத்திற்குள் 30 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் வெறும் 4.1 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல இந்தாண்டு இறுதிக்குள் அனைத்தது இளைஞர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் எனக் கூறியுள்ளது. உண்மையில் தினசரி வெறும் 14 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. நமக்குத் தேவை தடுப்பூசிகள் தான் முதலை கண்ணீர் இல்லை" என ட்வீட் செய்துள்ளார்,