Delhi Car blast: "கை ஒரு இடத்தில்.. தலை ஒரு இடத்தில்"- சம்பவத்தை நேரில் பார்த்தவர் சொன்ன ஷாக் தகவல்!
டெல்லி: டெல்லியில் கார் வெடித்து 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தை நேரில் பார்ந்த நபர், "பயங்கரமான வெடிச்சத்தம், நிலநடுக்கம் தாக்கியது போல் கட்டிடங்கள் அதிர்ந்தன. சாலையில் உடல்கள் சிதறிக் கிடந்தன. ஒரு இடத்தில் ஒருவரின் கையும், மற்றொரு இடத்தில் ஒருவரின் தலையும் கிடந்தது" என அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.
டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சில கடைகளும், வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. சம்பவ இடத்திற்கு டெல்லி காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த கார் குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் மார்க்கெட் உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்து சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடி விபத்தை நேரில் பார்த்த மற்றும் அந்தப் பகுதிக்கு அருகே இருந்தவர்கள் இந்தச் சம்பவம் குறித்து விவரித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்தில் இருக்கும் ஒருவர் பேசும்போது, "நாங்கள் இங்கு வந்து பார்த்தபோது மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. சில வாகனங்கள் சேதம் அடைந்து இருந்தன" எனத் தெரிவித்தார்.
அதேபோல் மற்றொருவர், "இதுபோன்ற வெடி சத்தத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் கேட்டதே இல்லை. மூன்று முறை வெடி சத்தம் கேட்டதை நான் உணர்ந்தேன். அந்த சமயத்தில் நாம் எல்லோரும் சாகப்போகிறோம் என்றே நினைத்தேன்" எனத் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தின் அருகே வீட்டில் இருந்த ஒரு முதியவர் பேசும்போது, "தீ எரிவதை என் வீட்டில் இருந்து பார்த்தேன். அதன் பிறகு உடனடியாக கீழே வந்து என்ன நடக்கிறது என பார்க்க வந்தேன். பெரும் சத்தத்துடன் கார் வெடித்தது" எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாந்தினி சவுக் வர்த்தகர்கள் சங்க தலைவர் சஞ்சய் பார்கவா "பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டது. அதன் அதிர்வுகள் 700 முதல் 900 மீட்டர் தொலைவு வரை உணரப்பட்டது. நிலநடுக்கம் தாக்கியது போல் கட்டிடங்கள் அதிர்ந்தன. சாலையில் உடல்கள் சிதறிக் கிடந்தன. ஒரு இடத்தில் ஒருவரின் கையும், மற்றொரு இடத்தில் ஒருவரின் தலையும் கிடந்தது" என்று அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications