EAB வேணாம்.. நிலைமை மோசமாகும்! சிலருக்கே லாபம் - மத்திய அரசை எச்சரிக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி: மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதா ஆபத்தானது என்றும், சில மின் விநியோக நிறுவனங்களுக்கு மட்டுமே இதனால் பயன் கிடைக்கும் என்றும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் விமர்சித்து உள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரத்தின் முதல்நாளான இன்று லோக்சபாவில் மத்திய அரசு மின்சார சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்து இருக்கிறது.
கடந்த புதன்கிழமை மத்திய அமைச்சரவை மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று, லோக்சபாவில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இந்த மசோதாவை அறிமுகம் செய்து தற்போது அது நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தனியாருக்கு அனுமதி! இலவசத்திற்கு செக்! மின்சார திருத்த மசோதா.. எல்லா பக்கத்திலும் கிளம்பிய எதிர்ப்பு
மின் கட்டணம்
தற்போது நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார வாரியங்களே வழங்கி வரும் சூழலில், இந்த மசோதா சட்டமானால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மின்சாரத்துறை செல்லும் சூழல் ஏற்படும் அளவுக்கு அதில் பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
தனியார்மயம்
அதன்படி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் மின் வாரியங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு வரும் மின் கட்டணங்களை இனி தேசிய மின்சார ஆணையமே நிர்ணயம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது. அதேபோல், மின்சார விநியோகத்தை தனியாருக்கு வழங்கவும் இந்த மசோதா வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மானியத்தை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.
மானியம்
தற்போது தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், வீடுகளுக்கு முதல் 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுகிறது. அதேபோல், மாநிலங்களுக்கான மின் பங்கீட்டை பெற மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.
அர்விந்த் கெஜ்ரிவால்
இந்த சட்டம் மட்டும் அமலுக்கு வந்தால் மாநிலங்களின் உரிமைகள், இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், "மின்சார சட்டத்திருத்த மசோதா ஆபத்தானது. மின் பிரச்சனைகளை இது மேலும் மோசமாக்கும். மக்கள் கஷ்டம் அதிகமாகும். ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு இதை அறிமுதம் செய்யக்கூடாது." என்று தெரிவித்துள்ளார்.