ப.சி.க்கு ஒரு வேளை மட்டும் வீட்டு சாப்பாடு கொடுக்கலாம்.. அதுவும் வெஜிடேரியன்தான்.. டெல்லி நீதிமன்றம்
டெல்லி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஒரு வேளை மட்டுமே வீட்டு சாப்பாடு கொடுக்கலாம் என்றும் அதுவும் சைவ உணவு மட்டுமே அளிக்கலாம் என்றும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 14 நாட்கள் சிபிஐ காவலில் இருந்தார். இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார்.
ஆனால் அவரை ஜாமீனில் வெளியே விட சிபிஐயும் அமலாக்கத் துறையும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து சிதம்பரத்தை கடந்த 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

உணவு
அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு வீட்டு உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் சிறை உணவையே அவர் உட்கொண்டு வந்தார்.

நீதிமன்றக் காவல்
இந்த நிலையில் அவரது நீதிமன்றக் காவல் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்தவுடன் அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும் அவரது ஜாமீன் மனு மறுக்கப்பட்டு அவரை அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

வழக்கறிஞர்
இதனால் மீண்டும் திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்றக் காவல் முடிந்ததை அடுத்து அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார்.

கபில் சிபல்
எனினும் அவருக்கு ஜாமீன் வழங்கினாலும் சாட்சிகளை கலைத்து ஆதாரத்தை அழித்துவிடுவார் என சிபிஐ வாதம் செய்தது. இதையடுத்து ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை மீண்டும் நீட்டித்தது நீதிமன்றம். அப்போது ப.சி.யின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வீட்டு உணவு அளிக்க அனுமதி அளிக்குமாறு கபில் சிபல் கோரிக்கை விடுத்தார்.

நீதிமன்றம் உத்தரவு
வீட்டுச் சாப்பாடு அளிக்க தங்களுக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை என சிபிஐ தரப்பு தெரிவித்தது. ஆனால் அது வெஜிடேரியன் உணவாக இருக்க வேண்டும் என சிபிஐ வாதம் செய்தது. இதையடுத்து சிதம்பரத்துக்கு ஒரு வேளை மட்டும் வீட்டு சாப்பாடு அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications