இது தாலிபன் நாடு அல்ல.. இந்து ரக்ஷா தளம் தலைவரின் முன்ஜாமீன் நிராகரிப்பு.. டெல்லி கோர்ட் கண்டனம்
டெல்லி : டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தின் போது முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதாக இந்து ரக்ஷா தளம் தலைவர் பிங்கி சவுத்ரி மீது வழக்கு பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை தள்ளுபடி செய்த போது, டெல்லி நீதிமன்றம் "நாம் இருப்பது தாலிபான் நாட்டில் இல்லை" என்று கடுமையாக விமர்சித்தது.
டெல்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி அனில் ஆன்டில் ஆகஸ்ட் 21 அன்று பிறப்பித்த உத்தரவில், "நாம் இருப்பது தாலிபான் நாட்டில் இல்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் இருக்கிறோம். நமது பன்மை தன்மை மற்றும் பன்முக கலாச்சாரம் ஆகியவை தான் நாட்டை ஆளும் அரசின் கொள்கையாகும்.
நாடு முழுவதும் சுதந்திர தினத்தையொட்டி, ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸைக் கொண்டாடும் இந்த நேரத்தில், சிலரது மனங்கள் சகிப்புத்தன்மையில்லாத மற்றும் சுயநல நம்பிக்கைகளுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன

வெறுப்பு பிரச்சாரம்
இந்து ரக்ஷா தளம் தலைவர் பிங்கி சவுத்ரியின் பேச்சுக்களை பார்க்கும் போது, வகுப்புவாத முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது, அவமதிப்பு மற்றும் அச்சுறுத்தும் சைகைகள் உள்ளன. அவரது முகநூல் பக்கத்தில் சமூகத்தின் பிற பிரிவுகளிடையே வெறுப்பு மற்றும் தவறான விருப்பத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

இயற்கையான உரிமை
பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை என்று கூற முடியாது, இது அரசியலமைப்பில் பிரிவு 19 (1) (அ) இன் கீழ் வழங்கப்பட்ட மிகவும் நேசத்திற்குரிய இயற்கை உரிமையாகும், ஆனால் இப்போது இதை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

மத நல்லிணக்கம்
பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை என்று எல்லாவற்றையும் ஆதரிக்க முடியாது. அது மற்றவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதற்கு நீட்டிக்க முடியாது. சமாதானம், மத நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கை பராமரிப்பதற்கு பாதகமான செயல்களுக்கு எல்லாம் பேச்சுரிமை என்று கூறி விட்டுவிட முடியாது. நமது சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பை ஆக்கிரமித்து அழிக்க அனுமதிக்க முடியாது.
Recommended Video

வகுப்பு வாத கலவரம்
சுதந்திரமான கருத்து என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அரசியலமைப்பு கோட்பாடுகளை நசுக்க அனுமதிக்க முடியாது. இந்த குற்றச்சாட்டுகள் இயற்கையில் கடுமையானவை . இதுபோன்ற சம்பவங்கள் வகுப்புவாத பதட்டங்களை ஏற்படுத்தி கலவரங்களுக்கு வழிவகுத்து, பொது மக்களின் உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

விசாரணை ஆரம்ப கட்டம்
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட உள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்டவரிடம், குற்றத்தில் சம்பந்தம் உடைய பொருள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட உள்ளது. அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications