எக்சிட் போல்: ஆம் ஆத்மிக்கு வாக்களித்த 69% முஸ்லீம் மக்கள்.. செல்வாக்கு சரிந்த அதிர்ச்சியில் காங்.
டெல்லி: பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸை காட்டிலும் ஆம் ஆத்மி கட்சியே சிறந்தது என முஸ்லீம் வாக்காளர்கள் கருதியதாக இந்தியா டுடே மை இந்தியா எக்சிட் போலில் தெரிகிறது.
டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க பிரசார யுத்திகளை பாஜக கையாண்டது.
கெஜ்ரிவால்
அதன்படி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஷாகீன்பாகில் போராட்டம் நடத்துவோருக்கு கெஜ்ரிவால் பிரியாணி பொட்டலங்களை வாங்கித் தருவதாக பாஜக குற்றம்சாட்டியது. மேலும் டெல்லியில் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில் மக்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கெஜ்ரிவால் செய்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆம் ஆத்மி
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று தேர்தல் முடிந்த கையோடு சூட்டோடு சூடாக வெளியானது. அதில் பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கூறியுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக மத்திய அரசின் பொருளாதார வீழ்ச்சியும் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி திட்டங்களும் காரணமாக சொல்லப்பட்டன.
காங்கிரஸ்
இந்த கருத்து கணிப்பு முடிவுகளை பார்க்கும் போது 69 சதவீதமான முஸ்லீம்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 15 சதவீத முஸ்லீம்களும் பாஜகவுக்கு 9 சதவீத முஸ்லீம்களும் வாக்களித்துள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பல ஆண்டுகளாக முஸ்லீம் வாக்காளர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே என இருந்த நிலையில் அந்த வரலாற்றையும் கெஜ்ரிவால் மாற்றி எழுதியதால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
ஆம் ஆத்மி
இதுகுறித்து முஸ்லீம் வாக்காளர்கள் கூறுகையில் பாஜகவை தோற்கடிப்பதற்காகவே ஆம் ஆத்மியை தேர்வு செய்தோம். காங்கிரஸுடன் ஒப்பிடுகையில் பாஜகவை தோற்கடிக்கும் வலிமை ஆம் ஆத்மிக்கு இருப்பதாக கூறினர். முத்தலாக் திருத்தச் சட்டம் கொண்டு வந்ததில் முஸ்லீம் பெண்களுக்கு மகிழ்ச்சி இருந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அவர்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.