விடாதீங்க! டெல்லி போலீஸ் மீது ஓம் பிர்லா, வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் எம்பிக்கள் சரமாரி புகார்
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் தாக்கியதாகவும், இதில் தலையிட வேண்டும் எனவும் மக்களவை சபாநாயகம் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரிடம் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் புகார் கடிதம் வழங்கினர்.
மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அரசு எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கில் மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் தான் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை எனவும், இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் ராகுல்காந்தி நேற்று வரை தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். இதற்கிடையே மத்திய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் தொடர்ந்து 3 நாட்கள் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கைது செய்து வருகின்றனர்.

போலீஸ் தாக்குதல்
இதற்கிடையே போலீசார் காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கேசி வேணுகோபால், ப சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உள்பட ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு நேற்று காங்கிரஸ் அலுவலகம் உள்ளே நுழைந்து போலீசார் தாக்கியதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

வெங்கையாநாயுடுவிடம் புகார்
இந்நிலையில் தான் டெல்லி போலீசாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து இன்று புகார் கடிதம் வழங்கினர். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் மக்களவை எம்பிக்கள் ஓம்பிர்லாவை சந்தித்து புகார் கடிதம் வழங்கினர். அதேபோல் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் ப சிதம்பரம், கேசி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்கள் வெங்கையா நாயுடுவை சந்தித்து புகார் கடிதம் கொடுத்தனர்.

விதிகளை மீறிய போலீசார்
வெங்கையா நாயுடுவிடம் வழங்கிய புகார் கடிதத்தில், ‛‛ஜூன் 13, 14 மற்றும் 15 தேதிகளில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பிக்களிடம் டெல்லி காவல்துறை தவறாக நடந்து கொண்டனர். இதற்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம், அக்பர் சாலையில் டெல்லி போலீசார் விதிகளை மீறி செயல்பட்டுள்ளனர். ஜூன் 15ல் (நேற்று) காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து எம்பிக்கள், பத்திரிகையாளர்கள், தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் காரணங்கள் ஏதுமின்றி பல போலீஸ் நிலையங்களில் எம்பிக்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு 10 மணிநேரத்துக்கும் அதிகமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது எம்பிக்களின் சிறப்புரிமைகளை மீறும் வகையில் உள்ளது. இதனால் இந்த சம்பவங்களை கவனத்தில் கொண்டு தலையிட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்த பிறகு ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‛‛நாங்கள் எதிர்கொண்ட வன்முறை மற்றும் அட்டூழியங்கள் குறித்து விரிவான விவரத்தை அளித்துள்ளோம். சபாநாயகர் நாங்கள் சொல்வதை பொறுமையாக கேட்டார். எங்கள் எம்பிக்கள் மீது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரினோம். எம்பிக்கள் பயங்கரவாதிகள் பால் நடத்தப்பட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். பெண் எம்பியின் உடை கிழிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் அளித்துள்ளோம்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications