டெல்லியின் முதல் கொரோனா நோயாளி குணமடைந்தார்! பாதிப்பு அறிகுறி, சிகிச்சை எப்படி? அவரே சொல்வதை பாருங்க
டெல்லி: 'கொரோனா' வைரஸ் தாக்கிவிட்டால், என்ன செய்வது என்று நினைத்து அச்சப்பட வேண்டாம், என்பதை நிரூபித்துள்ளார் டெல்லியில் சிகிச்சை பெற்று குணமடைந்த நபர். 45 வயதாகும் அந்த தொழிலதிபர், டெல்லியில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்.
இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளார். அதேநேரம் 2 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் எனஅறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவுக்கு சென்று வந்த நிலையில்தான், நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டு இருந்தது.
இது எப்படி சாத்தியமானது? சிகிச்சை முறைகள் எப்படி இருந்தன? இதுதொடர்பாக அச்சம் தேவைதானா? உள்ளிட்டவை பற்றி அவர் பத்திரிகையாளர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதை பார்க்கலாம்.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டு
கொரோனா வைரஸ் ஒருவேளை பரவினாலும், பயப்பட்டு கவலைப்படத் தேவை கிடையாது. இதுவும் சாதாரண ஃப்ளூ காய்ச்சல் போலத்தான். ஒரு ஆரோக்கியமான, மற்றும் வாலிப அல்லது நடுத்தர வயது நபர்கள் உரிய நேரத்தில் மருத்துவரை அணுகி விட்டால் போதும். குணப்படுத்த கூடிய அளவுக்கு நமது மருத்துவத் துறை பலமானதாக இருக்கிறது. உலகிலேயே சிறந்த மருத்துவ நெட்வொர்க் நமது நாட்டில் இருப்பதாகத்தான், நான் நினைக்கிறேன். தனிமைப்படுத்தப்பட்ட வார்டு என்பது சிறைச்சாலை போல இருக்கிறது. 2 அடிக்கு 2 அடி என்ற அளவில் சூரிய வெளிச்சம் உள்ளே வராத அளவுக்கான ஒரு இடத்தில் வைத்துதான் சிகிச்சை கொடுக்கிறார்கள்.

காய்ச்சல்
நான் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஐரோப்பாவில் இருந்து நாடு திரும்பினேன். அடுத்த நாள் காய்ச்சல் இருப்பதை உணர்ந்தேன். நான் ஒரு மருத்துவரை பார்க்க உடனடியாக கிளம்பினேன். அவர், பரிசோதித்துவிட்டு தொண்டையில் இன்பெக்சன் இருப்பதாக கூறினார். மூன்று நாட்களுக்கு மருந்துகளை அவர் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து28ஆம் தேதி வாக்கில் சரியானது போல தோன்றியது. ஆனால், 29ஆம் தேதி மறுபடியும் காய்ச்சல் ஏற்பட்டது.

அருமையான மருத்துவர்கள்
எனவே ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தனர். மார்ச் 1ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு நான் மாற்றப்பட்டேன். நான் பயத்தில் உறைந்து போய் இருந்தேன். ஆனால் என்னை பரிசோதிக்க வந்த மருத்துவர்கள் என்னைத் தேற்றினார்கள். இது குணப்படுத்தக் கூடியதுதான்.. நீங்கள் ஒரு ஆரோக்கியமான மனிதர்.. இது ஒரு ஜலதோஷம், இருமல் போன்ற ஒரு பிரச்சனைதான். என்ன ஒன்று, இதை குணப்படுத்த சற்று அதிக நாட்கள் தேவைப்படும்.. அவ்வளவுதான்.. நீங்கள் பயப்பட வேண்டாம், என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
Recommended Video

நல்ல சிகிச்சை
நான் டாக்டர் கிடையாதுதான். இருந்தாலும் வழக்கமான சளி மற்றும் இருமலை விட இது சற்று வித்தியாசமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் நான் இருந்தேன். அங்கு வசதிகள் சிறப்பாக இருந்தன. தனியார் மருத்துவமனைகளை விடவும் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சிகிச்சை பெற்று திரும்பிய அந்த 45 வயது தொழிலதிபர் தெரிவித்துள்ளார். டெல்லியில் மொத்தம் ஏழு பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில் 68 வயது மூதாட்டி மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் படிப்படியாக குணம் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications