இந்தியாவுக்கு 2.01 கோடி கொரோனா தடுப்பு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தேவை!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அடுத்த 3 மாதங்களுக்கு 2 கோடி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுவதாக மத்திய மருந்துகள் சார் துறையின் செயலாளர் டாக்டர். பி.டி. வகேலா கூறியுள்ளார்.
மத்திய அரசின் கொரோனா தடுப்பு உயர்நிலை குழுவின் தலைவராக உள்ள மருந்துகள் சார் துறையின் செயலாளர் டாக்டர். பி.டி. வகேலா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் 75,000 வென்டிலேட்டர்கள் தேவை இருக்கிறது. மத்திய அரசிடம் 19, 398 வென்டிலேட்டர்கள் கையிருப்பில் இருக்கிறது.
மேலும் 7, 884 வென்டிலேட்டர்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 1,000 மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். எஞ்சிய 6,884-ம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
பெல், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் 40,000 வென்டிலேட்டர்களை தயாரிக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் என்- 95; என் - 99 முக கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை 2.01 கோடி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) அடுத்த 3 மாதங்களுக்கு தேவை . இதில் 1.42 கோடி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்தியாவுக்கு 35 லட்சம் பிடி-பிசிஆர் பரிசோதனை கருவிகள் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையானதாக உள்ளது. இதனால் மருத்துவ கவுன்சில் 21.35 லட்சம் பரிசோதனை கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது. இதில் 13.75 கருவிகள் வந்துவிட்டன. இவ்வாறு வகேலா கூறினார்.