காங். தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை-திக்விஜய்சிங் திடீர் முடிவு! மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு!
டெல்லி: அகிலா இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என மூத்த தலைவர் திக்விஜய்சிங் திடீரென அறிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் மல்லிகார்ஜூன போட்டியிட்டால் அவரை ஆதரிப்பேன் எனவும் கூறியிருக்கிறார் திக்விஜய்சிங்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அக்டோபர் 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ரேஸ்.. சோனியா ஆதரவு யாருக்கு? 'குறுக்கே புகுந்த 2 தலைகள்’.. இன்று முடிவு தெரியும்!
ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளனர். ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றின. ஆனால் ராகுல் காந்தி இதனை நிராகரித்துவிட்டார். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பல மூத்த தலைவர்கள் போட்டியிட விரும்பினர்.
கெலாட் விவகாரம்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. சோனியா காந்தி குடும்பமும் அசோக் கெலாட் போட்டியிடுவதை விரும்புவதாக தகவல்கள் தெரிவித்தன. அதேநேரத்தில் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவரானால் ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதில் குழப்பம் வெடித்தது. இதனால் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பிளவுபடும் நிலைமை உருவானது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடவே இல்லை என்று ஜகா வாங்கிவிட்டார் அசோக் கெலாட்.
களத்தில் மல்லிகார்ஜூன கார்கே
அசோக் கெலாட் தவிர சசி தரூர், திக்விஜய்சிங், கமல்நாத், மீரா குமார், முகுல் வாஸ்னிக், பவன் பன்சால் ஆகியோரது பெயர்களும் காங்கிரஸ் தலைவர் பதவி வேட்பாளர்கள் என அடிபட்டன, இதில் சிலர் காங்கிரஸ் தலைமையகத்தில் வேட்புமனுக்களையும் வாங்கிச் சென்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பெயர் அடிபட்டு வருகிறது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா குடும்பத்தின் ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திக்விஜய்சிங் திடீர் முடிவு
இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே மிக முக்கிய போட்டியாளராக உருவெடுத்திருக்கிறார். இப்போது புதிய திருப்பமாக காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என திடீரென திக்விஜய்சிங் அறிவித்திருக்கிறார். அத்துடன் மல்லிகார்ஜூன கார்கேவை தாம் ஆதரிப்பேன் எனவும் திக்விஜய்சிங் அறிவித்துள்ளார். இதனால் அசோக் கெலாட் - சசிதரூர் என்ற போட்டி மல்லிகார்ஜூன கார்கே - சசி தரூர் என உருமாறி நிற்கிறது. இன்று மாலை வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய நேரம் இருப்பதால் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு நீடித்து வருகிறது.