திராவிட மாடல் என்றால் என்ன? லோக்சபாவில் கிளாஸ் எடுத்த செந்தில்குமார் எம்.பி.. பாஜகவிற்கு நேரடி சவால்
டெல்லி : தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வைத்து அவர்களின் சாதியை அடையாளம் காண முடியுமா என பாஜகவுக்கு சவால் விடுத்த திமுக எம்பி செந்தில் குமார், இதை பார்த்து ஒருவராவது தங்கள் பெயரில் சாதி பெயரை தூக்கி எறிந்தால் வெற்றி என கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "திராவிடியன் ஸ்டாக்" என பயோவை மாற்றினார். தொடர்ந்து தனது பேச்சின் போது திராவிட மாடல் என்ற வார்த்தையையும் முதல்வர் பயன்படுத்தி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலினை பின்பற்றி திமுக முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள் 'திராவிட மாடல்' என்ற சொல்லாடலை பயன்படுத்தி பேசுவதோடு சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

திராவிட மாடல் என்ன?
அதே நேரத்தில் வலதுசாரி சிந்தனையாளர்கள், திராவிட மாடல் என்றால் என்ன? எனவும் இது குறித்து விளக்கம் அளிக்க முடியுமா என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த நிலையில் திராவிடம் என்றால் என்ன என்பது குறித்து மருத்துவரும் , திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான செந்தில் குமார் விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் பட்டியிலடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் திருத்த மசோதா குறித்து பேசியபோது இதுதொடர்பாக விரிவான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

செந்தில்குமார் எம்.பி.
மக்களவையில் பேசிய அவர், " வணக்கம் சபாநாயகர் அவர்களே! திராவிட மாடல் என்றால் என்ன என்று பலர் கேட்கிறார்கள். எனவே, அவற்றைப் பற்றி இங்கே நான் பேச விரும்புகிறேன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியையும் சேர்த்து 40 எம்பிக்கள் இங்கு உள்ளோம். எங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் எதுவும் இல்லை. இதை ஏன் இங்கு வலியுறுத்தி சொல்கிறேன் என்றால், நான் எதிர்நிலையில் இருக்கும் உங்களை பார்த்து ஒரு சவால் விடுகிறேன். அவை என்னவென்றால், நான் முன்னேறிய சாதியை சேர்ந்தவனா? அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவனா? அல்லது பழங்குடியைச் சேர்ந்தவனா? என்று உங்களால் அடையாளம் காண முடியுமா? இந்தக் கேள்விக்கு 'முடியாது' என்பதே பதிலாக இருக்கும்.

மக்களவையில் பேச்சு
நான் மட்டும் அல்ல தமிழகத்தில் இருந்து வரும் எந்த ஒரு நபரிடம் இருந்தும் அவர் என்ன சாதி என்று பெயரை வைத்து யாரும் கண்டுபிடிக்க முடியாது. பட்டியல் படுத்தப்பட்ட சாதிகளால் சாதி பெயரை அவர்கள் பெயருடன் போட்டுக்கொள்ள முடியாது. அப்படி என்றால் இதர பிரிவினருக்கு இது ஒரு சலுகைதானே? ஏனென்றால் ஐயர்கள், ஐயங்கார்கள், மோடிகள், பானர்ஜிகள், நாயுடுக்கள் போன்றோர்கள் தங்கள் சாதி பெயர்களை பின்னால் போட்டுக்கொள்ள முடியும்.

திராவிட மாடலுக்கு வெற்றி
அதனால் என் கூற்று என்னவென்றால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வது என்பது ஒரு சலுகை ஆகும். ஆனால், ஒரு நபர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியினருக்கு இச்சலுகை கிடையாது. இவை எல்லாம் பாகுபாட்டுக்குத்தான் வழி வகுக்கும். எனவே, நான் வலியுறுத்துவது கேட்ட பிறகு இந்தியாவில் யாரேனும் ஒருவர் தன்னுடைய சாதிப் பெயரை மாற்றி இயற்பெயர் மட்டும் வைத்துக்கொண்டால், அது திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றியாகும். நன்றி" என பேசினார். இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications