74வது குடியரசுத் தினம்.. அக்னி வீரர்கள் முதல் பெண் BSF வீராங்கனைகள் வரை! விழாவில் ஏகப்பட்ட புதுமைகள்
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 74வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த அணி வகுப்பில் முதன் முறையாக பல புதிய அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல ராஜ பாதையில் பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் அணிவகுப்பு நடைபெறுகிறது. ஆனால் இந்த முறை ராஜ பாதையில் இல்லாமல் கடமை பாதையில் அணிவகுப்பு நடைபெறுகிறது. டெல்லி ராஷ்டிரபதி பவனில் தொடங்கி இந்தியா கேட் வரை நீண்டுள்ள பாதை ஆங்கிலேயர் காலத்தில் 'ராஜபாதை' என்று அழைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி இந்த சாலையை 'கடமை பாதை' என்று பெயர் மாற்றினார்.
எனவே கடமை பாதையில் நடைபெறும் முதல் குடியரசுதின அணிவகுப்பு இதுதான். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டு வீரர்கள் இந்த அணிவகுப்பில் ஈடுபடுவார்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் கடந்த சுதந்திர தின அணிவகுப்பில் பயன்படுத்தப்பட்டாலும், குடியரசு தின அணிவகுப்பில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
9 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்ட நாள்-ட்விட்டரில் பறக்கும் 'விஸ்வாசம்'!
ஆயுதம்
வழக்கமாக இந்த அணிவகுப்பில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் காலத்து 25-பவுண்டர் ஃபீல்ட் கன் (Field Gun) இடம்பெற்றிருக்கும். ஆனால் முதல் முறையாக இதற்கு மாற்றாக 21-துப்பாக்கி சல்யூட் தேசி 105 மிமீ இந்திய ஃபீல்ட் கன் இடம்பெற்றிருக்கும். அதேபோல இந்த ஆண்டு அணிவகுப்பில் முதன் முறையாக 180 எகிப்து ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அல் சிசி பங்கேற்கிறார். மட்டுமல்லாது அக்னிபாத் திட்டத்தில் பணியில் சேர்ந்துள்ள அக்னி வீரர்களும் இந்த அணிவகுப்பில் முதன் முறையாக இடம்பெறுகின்றனர்.
பெண் வீரர்கள்
பாக்கிஸ்தானுடனான பாலைவன எல்லையைக் காக்கும் பெண் வீரர்கள் BSF ஒட்டகக் குழுவின் ஒரு பகுதியாக அணிவகுப்பில் பங்கேற்பார்கள். அதேபோல இந்திய கடற்படையின் டோர்னியர் 228 ரோந்து விமானத்தின் உயரதிகாரியாக உள்ள லெப்டினன்ட் கமாண்டர் திஷா அம்ரித் இந்த ஆண்டு அணிவகுப்பில் 144 மாலுமிகள் கொண்ட கடற்படைக் குழுவை வழிநடத்துகிறார். இந்த அணிவகுப்பில் கடற்படையின் IL-38 கடல் உளவு விமானம் கடைசியாக பறக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படைக்கு சேவையாற்றிய இந்த விமானம் இந்த குடியரசு தின அணிவகுப்புடன் தனது பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
விமானங்கள்
IL-38 விமானம் தவிர 9 ரஃபேல் ஜெட் விமானங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என 44 வானூர்திகள் இதில் பங்கேற்கிறது. காலை 10.30 மணிக்கு விஜய் சௌக்கில் தொடங்கி செங்கோட்டை வரை அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இதில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரலாறு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் சார்பில் 6 அலங்கார ஊர்திகள் இதில் பங்கேற்கின்றன. அதேபோல முன்னெப்போதும் இல்லாத வகையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் முதல் முறையாக ஒரு அட்டவணையை காட்சிப்படுத்துகிறது.
வழக்கமானவை
இது தவிர வழக்கமாக காட்சிப்படுத்தப்படும் நவீன ஏவுகணைகள், பீரங்கிகள், இதர போர் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்படும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இந்த அணிவகுப்பை பார்வையிடுவதற்கு அதிகமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் அணி வகுப்பு நடைபெற உள்ள நிலையில் டெல்லி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.