பாஜகவை தோற்கடிக்க 3ஆம் அணி? கண்டிப்பாக வாய்ப்பில்லை.. அடித்துக் கூறும் பிரசாந்த் கிஷோர்.. ஏன்?
டெல்லி: தேசிய அளவில் தற்போது உள்ள சூழலில் மூன்றாம் அணியால் வெற்றிகரமாக இருக்க முடியும் என்று தான் கருதவில்லை என்று பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
நடந்த முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் மட்டும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 18 கோடியை நெருங்கியது; உயிரிழப்புகள் 38,88,332 ஆக அதிகரிப்பு!
இந்தத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் மற்றும் தமிழ்நாட்டில் திமுகவிற்காக தேர்தல் ஆலோசகராக பணிபுரிந்தவர் பிரசாந்த் கிஷோர்.
பிகே-சரத்பவார்
கடந்த சில நாட்களாகவே பிரசாந்த் கிஷோர் நாட்டிலுள்ள முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். தற்கால அரசியல்வாதிகளில் பழுத்த அனுபவம் கொண்டவராக அறியப்படும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் கடந்த 11ஆம் தேதி பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இரண்டாவது முறையாக இன்றும் சரத்பவாரை சந்தித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார்.
3ஆம் அணி
இதன் மூலம் தேசியளவில் பாஜகவுக்கு எதிராக 3ஆவது அணியைக் கட்டமைக்க இருவரும் முடிவு செய்துள்ளனர் எனத் தகவல் பரவியது. இந்தத் தகவல்களுக்கு வலுசேர்க்கும் விதமாக நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு சரத்பவார் அழைப்பு விடுத்திருந்தார் இந்தச் சூழலில் மூன்றாம் அணியால் தேர்தலில் பாஜகவை வெல்ல முடியும் எனத் தான் கருதவில்லை என்று பிரசாந்த் கிஷோர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நம்பிக்கையில்லை
இது குறித்து அவர் கூறுகையில், "வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எந்தவொரு கட்சியுடனும் தற்போதுவரை கைகோர்க்கவில்லை. நாட்டில் இப்போது இருக்கும் சூழலில் 3ஆவது, 4ஆவது அணிகளால் வெற்றிகரமாக இருக்க முடியும் என நான் கருதவில்லை. 3ஆம் அணி என்பது ஏற்கனவே கடந்த காலங்களில் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட ஒன்று. தற்போதைய இருக்கும் நிலைக்கு இது ஏற்றதாக இருக்காது.
என்ன ஆலோசனை
3ஆம் அணியைக் கட்டமைப்பது குறித்து ஆலோசிக்க சரத்பவரை சந்திக்கவில்லை. அது மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு. கடந்த காலங்களில் இருவரும் நெருக்கமாக இணைந்து பணியாற்றவில்லை என்பதால் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளும் வகையில் இந்தச் சந்திப்பு அமைந்தது. அவருடன் அரசியல் குறித்துத் தான் விவாதித்தேன். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை எதிர்க்க என்ன செய்ய முடியும் என ஆலோசித்தோம். ஆனால், 3ஆம் அணி குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை" என்றார்.
மேற்கு வங்கம்
முன்னதாக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெற்ற வெற்றி என்பது பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சியால் கண்டிப்பாக வெல்ல முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தச் சூழலில்தான் தற்போது பிரசாந்த் கிஷோர் 3ஆம் அணி குறித்த திட்டம் இல்லை என தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
சரத்பவார்
மூத்த அரசியல்வாதியான சரத்பவார் தனது வல்லமைமிக்க அனுபவத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பார் என்றும் தேர்தலில் வெல்ல பிரசாந்த் கிஷோர் உதவுவார் என்றும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில்தான் இன்று சரத்பவார் இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.