இந்தியா-பாக். போட்டி! ஒன்னா பார்க்க கூடாது! எதுவும் சொல்லக்கூட கூடாது! காஷ்மீர் என்ஐடி வினோத உத்தரவு
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே இன்று கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிலையில், இது தொடர்பாகக் காஷ்மீரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி வரும் செப்.11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது. இதனிடையே இரண்டாம் நாளான இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

ஆசியக் கோப்பை
இதனிடையே காஷ்மீரில் இருக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) மாணவர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்று நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் குழுக்களாகப் பார்க்கவோ அல்லது அது தொடர்பான எதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவோ வேண்டாம் என என்ஐடி கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

அறிவிப்பு
மேலும், போட்டி நடைபெறும்போது மாணவர்கள் ஹோஸ்டர் அறைகளில் இருக்குமாறும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இது தொடர்பாக கல்லூரி டீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பல்வேறு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் மாணவர்கள் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொண்டு, எந்த விதமான ஒழுங்கீனத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

அபராதம்
இன்று போட்டி நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹாஸ்டர் ரூம்களில் மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல மற்ற மாணவர்கள் யாராவது அறைகளுக்குள் வந்தால் அனுமதிக்கக் கூடாது. போட்டியை மாணவர்கள் குழுக்களாகப் பார்க்க அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அறை யாருக்கு ஒதுக்கப்பட்டதோ அந்த மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அங்கிருந்த மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சமூக வலைத்தளங்களில்
சமூக வலைத்தளங்களில் கூட போட்டி தொடர்பான எந்தவொரு தகவலையும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. போட்டி நடக்கும் போதும் சரி முடிந்த பிறகும் சரி மாணவர்கள் ஹாஸ்டர் ரூமை விட்டு வெளியே வரவேண்டாம்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. விளையாட்டுப் போட்டி ஒன்றுக்கு இந்தளவுக்குக் கட்டுப்பாடுகளை ஏன் கல்லூரி நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மோதல்
அதேநேரம் மாணவர் நலன் காரணமாகவே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதாகக் கல்லூரி நிர்வாகதற்கு ஆதரவாகவும் சிலர் கருத்து கூறி வருகின்றனர். முன்னதாக 2016இல் டி-20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்தியா தோல்வியடைந்தது. அந்த சமயம் காஷ்மீர் என்ஐடி கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கல்லூரி பல நாட்களுக்கு மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications